கு.மா.பா.திருநாவுக்கரசு/அம்மா…

          - 

வானம் தான்
பூமிக்கு அம்மா! - அவள்
தானம் மழையமுதம்
தாய்ப் பாலாம்!

மாமலை தான்
மடுவிற்கு அம்மா! – அவள்
மார்பகத்தில் வழியு மருவி
தாய்ப் பாலாம்!

ஆழியெல்லாம்
மேகத்தின் அம்மா! – அவள்
ஆவியெனும் மாருதமே
கார் அமுதம் ஆகும்!

நீர் நிலைகள்
சீர் நிலத்தின் அம்மா!
பாயும் மடை வெள்ளம்
பாலமுதம் அன்றோ?

பாரதத்தாய்
பன்மொழிக்கும் அம்மா! – மொழி
பலவாகி வாழ்ந்தாலும்
ஓர் அன்னை ஆனாள்!

தாய்மொழியால்
தாலாட்டும் அம்மா! – இங்கே
தாய்க்கு இணையாய் ஓர் உறவு
தரணியில் ஏதம்மா?

உலக அன்னையர் தினத்தில்
உளமார்ந்த வாழ்த்துகள்!

One Comment on “கு.மா.பா.திருநாவுக்கரசு/அம்மா…”

Comments are closed.