இனிக்கும் தமிழ் – 38

டி வி ராதாகிருஷ்ணன்


களையெடுக்கா உழவர்கள்



கோசல நாட்டில் வாழ்கின்ற சிலஉழவர்கள் தங்கள் வயல்களில்வளர்ந்துள்ள களைகளை நீக்கவேண்டுமென்று முடிவு செய்கிறார்கள்.போகின்ற வழியிலே கள் அருந்திவிட்டுதங்கள் நிலங்களுக்குச் செல்கிறார்கள். அங்கே குவளை, தாமரை, ஆம்பல்போன்ற மலர்கள் மட்டுமே களைகளாகஉள்ளன. வேறு களைகளைக் காணமுடியவில்லை.

குடித்த கள் வாயோரங்களில் சற்று ஒழுகிபடி இருக்க, அக்களைகளை
நீக்காமல்,கள்ளுண்ட மயக்கத்தில்,இங்குமங்குமாக உலாவிக்
கொண்டிருக்கிறார்கள். வந்த வேலையைப் பார்க்காமல் ஏன் இப்படி உலாவிக் கொண்டிருக்கிறார்கள்.அதற்கு என்ன காரணம்? நம் கம்பநாட்டான் சொல்கிறான்,

அந்த உழவர்களின் கண்களுக்கு அங்குள்ளக் களைகள் எல்லாம்
இனிமையாகப்பேசுகின்ற, தங்கள் அன்பிற்குப்பாத்திரமான உழவ மகளிரின் உடல் உறுப்புக்களைப் போல உள்ளனவாம். அது எப்படி?


குவளை மலர்கள் அப்பெண்டிரின் கண்கள் போலவும், தாமரை அவர்களின் கை, கால், முகங்கள் போலவும், ஆம்பல் மலர்கள் அப்பெண்டிரின் வாய்கள் போலவும் காட்சி அளிக்கின்றன.அதனால் அவற்றைக் களைவதற்கு மனது வராமல் அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருக்கின்றனராம். இது எப்படி இருக்கின்றதென்றால், அற்பஅறிவுடையவர்கள் தவறான பெண்களின் காம வலையில் சிக்கிவிட்டால், அப்பெண்களை விட்டு விலக வேண்டிய நேரத்தில் கூட விலக முடியாமல் துன்பப்படுவார்கள் என்று ஓர் அறிவுரை
யையும் அங்கே தன் பாடலில் வைக்கிறான்
கம்பன்!

கம்பனின் அந்தப் பாடல்

:
பண்கள் வாய் மிழற்றும் இன்
சொல் கடைசியர் பரந்து நீண்ட
கண், கை, கால், முகம், வாய் ஒக்கும்
களை அலால் களை இலாமை,
உண் கள் வார் கடைவாய் மள்ளர்,
களைகலாது உலாவி நிற்பர்;-
பெண்கள்பால் வைத்த நேயம்
பிழைப்பாரோ, சிறியோர் பெற்றால்?
                            (பாலகாண்டம்,நாட்டுப்படலம், 42)


 கள் குடித்தால் உருப்பட மாட்டாய் என்று நேரடியாகச் சொல்லாமல்
அதற்குஉவமைகளைக் கூறிச் சொல்வதில் கம்பனை விஞ்சமுடியுமா

                        _டி வி ராதாகிருஷ்ணன்