வளவ.துரையன்/எது தேவை?

சாக்ரடீஸ் ஒருமுறை கிரேக்க நாட்டின் தலைநகர் ஏதென்ஸின் அங்காடித் தெருக்களில் சுற்றிக்கொண்டே வந்தார்.

நாலைந்து தெருக்களின் உள்ளே நுழைந்து கடைகளில் உள்ள பொருட்களையெல்லாம் கூர்ந்து கவனித்தார்.

எதுவும் வாங்கவில்லை.

பின்னர்,
மறுநாளும் அங்காடித் தெருவில் நுழைந்து கடைகளில் உள்ள பொருட்களைக் கூர்ந்து நோக்கிய
வண்ணம் நடந்து சென்று விட்டார்.

இப்படியே ஒரு வாரமாக அங்காடித் தெருக்களில் பல கடைகளை சுற்றிப் பார்த்து விட்டுச்சென்று விடுவார்.

ஏழாம் நாள்…

சாக்ரடீஸ் அங்காடித் தெருவில் உலா வருவதைக்கண்ட ஒரு கடைக்காரர்,
“அய்யா நானும் கடந்த ஆறு நாட்களாகப் பார்த்துக் கொண்டே வருகிறேன். கடைத்தெரு வழியே வருகிறீர்கள், கடையில் உள்ள பொருட்களைப் பார்க்கிறீர்கள்,
ஆனால் இது நாள் வரையிலும் எந்தப் பொருளையும் வாங்கவே இல்லை!

உங்களுக்கு எந்தப் பொருள் வேண்டும் என்றால் நான் அந்தப் பொருளை வரவழைத்துத் தருவேனே?” என்று கேட்டார்.

அதற்கு சாக்ரடீஸ்,
அன்புள்ளம் கொண்ட கடைக்காரரே… இங்குள்ள பல கடைகளில் உள்ள பொருட்கள் எவையும் என் வீட்டில் இல்லை!

‘இந்தப் பொருட்கள் எவையும் இல்லாமல் என்னால் வாழ முடிகிறதே!’ என்று எண்ணிப் பார்த்து ஒவ்வொரு நாளும் மகிழ்கிறேன்…”, எனக் கூறினாராம்.

கடைக்காரர் வியந்துபோய் விக்கித்து நின்று விட்டாராம்!

ஆம், நமது வாழ்க்கைக்கு தேவைப்படாத பொருட்கள் நம்மிடம் இருப்பதை விட இல்லாத போது தான் அதிக சந்தோஷத்தை கொடுக்கும்…

ஆகவே, ஆடம்பர மோகத்தில் அத்தியாவசியத்தை தவற விட்டு விடக்கூடாது…