
சிறு நூல் வேலி தான்
அறுக்க முடியும் என்னால் எளிதாக.
சிறிதும் பெரிதுமாய் முடிச்சுகள்;
கண்ணுக்கு புலப்படாதவையும்,
கட்புலனுக்கு அகப்படாதவையுமாக.
அன்னை இட்டது சில;
அக்கம் பக்கம் இட்டது சில;
உற்றமும, சுற்றமும்,
சூழலும், சமூகமும்,
சேர்ந்து இட்ட வேலியிது.
இருக்கட்டும், அது அப்படியே!
சிலநேரம் பாதுகாப்பு,
சிலநேரம் விலங்கு.
சித்தமாய் தான் இருக்கிறேன்,
சிறு துண்டுகளாக
அறுத்துப் போட.
கூர் அறுவாள்
இரு கரத்திலும்
இருக்கிறது; என்னிடம்.
தக்க தருணத்தில்
தக்க புள்ளியில்
கூர் வாள் வீசி
வெட்டி எறிந்து கொண்டுதான் இருக்கிறேன்.
மீண்டும் உள் சென்று உள் முடிச்சிட்டுக் கொள்கிறேன்;
ஒரு பாதுகாப்புக்குத்தான்;
மீண்டும், மீண்டும் அறுத்தெறிய முடியும்
என்ற நம்பிக்கையில்!
அவளை சிறையிட்டோம் என்று நினைந்து செருக்குறாதீர்!
நீர் அறிய மாட்டீர், இது
நானே விரும்பி,இருக்கும்
சிறை; என்று.
உங்களிடமிருந்து தப்பிக்கவே தான்! நான்,
ஆயுதம் எடுக்காத வரை,
ஆபத்து இல்லை எவருக்கும்.

Arumai !🙏👏🙇♀️🌺