சுகா/தனது இறுதி யாத்திரைக்கு ஜே.கே கிளம்பியபோது…..

தனது இறுதி யாத்திரைக்கு ஜே.கே கிளம்பியபோது, வாசலுக்கு அவர் மனைவியும், கௌசல்யா மாமியும் அழைத்து வரப்பட்டனர். மாமியின் முகத்தில் உணர்ச்சியில்லை. ‘பத்திரமா போயிட்டு வாங்க, ஜே.கே’ என்று சொல்வது போல அமைந்திருந்தது அவரது முகம்.

பெசன்ட் நகர் மின்மயானக்கட்டிடத்தின் வாசலிலேயே முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செந்தில்நாதன் உட்பட அதன் நிர்வாகிகள் நின்று கொண்டிருந்தனர். ஜே.கேயின் நெருங்கிய நண்பரான தேவபாரதியை இரண்டு பேராகச் சேர்ந்து பிடித்தபடி அழைத்து வந்தார்கள். மின்மயானத்துக்கு ஜே.கேயின் மகள்கள் இருவரும் வந்தனர். கவிஞர் வைரமுத்து அங்கே ஏற்கனவே வந்துக் காத்திருந்தார். ஜே.கே யின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி விட்டு ஓரமாகக் கைகட்டி நின்று கொண்டார். வழக்கறிஞர் அருள்மொழி, பவா செல்லத்துரை, ஷைலஜா, பாரதி கிருஷ்ணகுமார் போன்றோரும் வந்து சேர்ந்தனர். ரஷ்யன் கான்ஸலேட்டிலிருந்து சூட் அணிந்த ஒருவரும், ஒரு பெண்மணியும் வந்து இறுதி மரியாதை செலுத்தினர். மின் தகனத்துக்கு ஜே.கே தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் ஒருவர் உரத்த குரலில்

‘வேற்று விகார விடக்குடம்பினுட்கிடப்ப

ஆற்றேனெம் ஐயா அரனேயோ என்றென்று

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்

மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே’

என்று சிவபுராணம் பாடிக் கொண்டிருந்தார்.

எல்லா சடங்குகளையும் படம்பிடித்துக் கொண்டிருந்த கேமராக்கள் மின் தகனத்துக்குச் செல்ல இருக்கும் கடைசி நிமிடத்தையும் சுற்றி நின்று பதிவு செய்து கொண்டிருந்தன. மின் மேடைக்கருகே ஒரு சிலர் கடைசியாக ஜே.கேயின் முகத்தைப் பார்க்கும் ஆர்வத்தில் ஏறினர்.

‘நாமளும் போகலாமா?’ என்று ராமகிருஷ்ணனிடம் கேட்டேன்.

‘வேண்டாம். நமக்குத் தாங்காது’ என்றார் ராமகிருஷ்ணன்.

‘சரிதான். வாத்தியார் விஷயத்துல இதுதான் ஆச்சு’.

அங்கேயே நின்று கொண்டோம். பி.ச. குப்புசாமி ஐயாவை லண்டனிலிருந்து ஜே.கேயின் அபிமானியும், ஆனந்த விகடனில் ஜெயகாந்தன் எழுதிய கதைகளை அழகாகத் தொகுத்து சமீபத்தில் புத்தகமாக வெளியிட்டவருமான டாக்டர் ராம் கைபேசியில் அழைத்தார். ‘வணக்கம். . . ஆமா . . . ஜே.கே கிளம்பிட்டார். . . இப்பதான் புறப்பட்டு போனார்’ என்றார், குப்புசாமி ஐயா. அத்தனை நேரம் ஜே.கேயின் மரணத்தை எளிதாக எடுத்துக் கொண்டு உறுதியாக இருந்த என்னை பி.ச.குப்புசாமி ஐயாவின் இந்த வார்த்தைகள் அசைத்து விட்டன. உள்ளே பெரும் கூக்குரல்கள் கிளம்பின. ஒரு வயதான இஸ்லாமியர் கண்களைத் துடைத்துக் கொண்டு கதறி அழுதபடியே வெளியே வந்தார். எனக்கு கண்கள் கலங்கத் துவங்கின. ‘ராமகிருஷ்ணன். இனி நம்மால தாக்குப் பிடிக்க முடியாது. வாங்க வெளியே போயிருவோம்’ என்று சொல்லியபடி, சட்டென்று வெளியே வந்து விட்டேன்.

பவா செல்லத்துரையின் தலைமையில் அங்கேயே ஓர் இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே பேசுவதற்கு மறுத்து வந்த ராமகிருஷ்ணன் அப்போதும் பேச மறுத்தார். பாரதி கிருஷ்ணகுமாரும் மறுத்தார். ‘கெளம்பலாம்’ என்றார், ராமகிருஷ்ணன். நாங்கள் கிளம்ப இருக்கையில், பெயரறியா ஒரு தோழர் வந்து, ‘அரசாங்கம் என்ன செய்யுது தோழர்? ஞானபீடம், பத்மபூஷன் வாங்கினவரு. மத்த மொழிக்காரங்கக்கிட்ட நமக்கான மரியாதைய ஏற்படுத்திக் குடுத்தவரு. பாருங்க. இங்கே நாம எத்தனை பேரு இருக்கோம்! நெஞ்சு கொதிக்குது தோழர்’ என்றார்.

யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல் அவராகப் பேசிக் கொண்டிருந்தார்.

தூரத்தில் நின்று கொண்டிருந்த எங்கள் ஊர்க்காரனான தம்பி மாரி செல்வராஜ் அருகில் வந்தான். ‘என்ன ஸார்! கூட்டமே இல்ல?’ என்றான். தோழரின் ஆதங்கத்தை ஒத்திருந்தது மாரியின் குரல்.

மாரி செல்வராஜ் கேட்டது வாஸ்தவம்தான். அஞ்சலிக் கூட்டத்தில் இருப்பவர்களையும், ஆங்காங்கே நின்று கொண்டிருந்தவர்களையும் சேர்த்து மொத்தமாக அந்த இடத்தில் நூறு பேர் இருந்திருப்பார்கள்.

‘இதென்ன கேரளாவாடே! தமிள்நாடுல்லா!’ என்றேன்.