சீவக சிந்தாமணி – 2
உஷாதீபன்
திருத்தக்கத்தேவரின் சீவக சிந்தாமணி காதலும் கற்பனையும் கலந்துறவாட இன்பச் சுவை சொட்டச் சொட்டப் பாடிய காவியம். காவியத்தை இயற்றிய ஆசிரியரின் அறிவாற்றலும், புலமையும் எண்ணியெண்ணி வியக்கத்தக்கவை. மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவத்தைத் தருபவை.
சீவகன் வரலாற்றுச் சுருக்கத்தின் முதல் பகுதி நாமகள் இலம்பகம். பேரழகும் பேரறிவும் உடைய சச்சந்தன் என்னும் மன்னன் வளமைமிக்க ஏமாங்கதம் என்னும் நாட்டின் இராசமாபுரம் எனும் நகரில் சிறப்புற அரசாட்சி செய்து வந்தான்.
வாக்கிலே நிறைந்து அறிவைத் தருகின்ற கலைமகளோடு, பொன் கொழிக்கப் புகழ் மணக்கும் திருமகளும் சேர்ந்து வாழ, மாமன்னன் கோலோச்சிக் குடி தழுவிய நாட்டு வளப்பத்தை இவ்வாறு தெரிவிக்கிறார் திருத்தக்கத்தேவர்.
காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகின் நெற்றிப் பூமாண்ட தீந்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து தேமாங் கனிசி தறிவாழைப் பழங்கள் சிந்தும் ஏமாங் கதமென் றிசையால் இசை போய துண்டே!
நடப்புலகில் நாம் கற்றறிந்து மனதில் வைத்திருக்கும் பல வார்த்தைகள் சங்க இலக்கியப் பாடல்களில் என்னென்ன பெயரிலெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை அறிய நேரும்போது அவற்றின் தனிப் பொருளறிந்து பிரித்து எடுத்து சேகரிக்கும் ஆர்வமும், வெவ்வேறு இலக்கியங்களைப் படிக்கும்போது அங்கு இதே வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனவா, அப்படியாயின் வேறேதும் பொருள் தருகிறதா என்பதான தேடலை நமக்கு ஏற்படுத்துகின்றன.
புலமாமகள் – கலைமகள் / வருக்கை – பலாப்பழம் / இசை – புகழ் / பாரற – தடையற / நெற்றி – உச்சி
காய்மாண்ட தெங்கின் பழம்வீழ – அதாவது பழுத்து முற்றிய தென்னை நெற்று சிதறிக் கீழே விழ,
கமுகின் நெற்றி பூமாண்ட – தென்னை நெற்று சிதறி விழுகின்ற வேகத்தில் கமுக மரத்தின் பூம்பாளை சிதற
தீந்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து – தேனடை பிய்ந்து தேன் வழிய, பலாப்பழம் பிளந்து சிதற
தேமாங்கனி கனிசி தறிவாழைப் பழங்கள் சிந்தும் – மாங்கனி உதிர்ந்து ஓட, வாழைப்பழம் சிதறிவிழும் ஏமாங்கதமென்றிசையால் இசை போய துண்டே – புவியோர் போற்றும் புகழ்மிக்க நாடு சச்சந்தன் ஆண்ட ஏமாங்கதம் எனும் நாடு.
