கண்கள் மூடி பிரார்த்திக்கையில்..

வசந்த தீபன்

கள்ளிகள்

 பூக்கள்

வாழ்ந்து  கொண்டிருக்கிறேன்

இதிகாசங்களுக்குள்  தூங்குபவர்கள்

தத்துவ  கோடாங்கிகளாக  ஊளையிடுகிறார்கள்

வீதிகளில்  வாழ்க்கை  குற்றுயிராய்  கிடக்கிறது

ஆசைப்படு

ஆசைப்படாதே

அட  போங்கடா 

தத்து பித்து வெத்துப்பயலுகளா

என்  பசியை  சொல்லத்  தெரியவில்லை

எந்த  வார்த்தை  எதை வெளிப்படுத்தும்

இருளுக்குள்  புதைந்து  கொண்டிருக்கிறேன்

கையால்  மீனைப்பிடிக்கிறேன்

நழுவிப்போகிறது

பதற்றம்  தொற்ற

நழுவிப்போகிறது

அன்றாட  வேதனைகளுக்கு  கவிதையைக்  கொல்வேன்

நுட்பங்களை  ஏந்தி  கனவுகளை  மட்டும்  சொல்லமாட்டேன்

வெற்றுப்  படிமங்களும்  சொற்களுமல்ல  என்  மெய்  தேடல் பெருவெளி

உக்கிரமான  வெயில்

தேசத்தை எரிக்கிறது

நாமெல்லாம்  தேசத்தில்  தான் வாழ்கிறோம்.