யாருக்கும் தெரிய வேண்டாம்?

கதை : 47 

           

அழகியசிங்கர்

            காலையில் கதவைத் திறந்தவுடன், வாசல் படிக்கட்டில் எலி செத்துக் கிடந்தது.  கொஞ்சம் அருவெறுப்பாக இருந்தது.

             மைதிலி எழுந்து வருவதற்குள் அப்புறப்படுத்தி விடலாமென்று தோன்றியது. உள்ளே உடனே போய் ஒரு முறம் எடுத்துக்கொண்டு வந்து ஒரு தாளில் செத்த எலியை தள்ளினேன்.

            பின் மூக்கைப் பிடித்துக்கொண்டு மாடிப்படிக்கட்டுகளில் ஜாக்கிரதையாக இறங்கி கேட்டைத் திறந்து வெளியே தூக்கி எறிந்தேன்.

            நான் தினமும் வித்தியாசமான முறையில் தூங்கிக் கொண்டிருப்பேன்.  திடீரென்று விழித்துக் கொள்வேன். மைதிலி  நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பாள்.

            கதவைத்திறந்து பால் பாக்கெட்டை எடுத்து உள்ளே வைப்பேன்.  அப்படித் திறந்தபோதுதான் செத்த எலியைப் பார்த்தேன்.  

            ஐந்துமணிக்குக் கதவைத் திறந்து பால் பாக்கெட்டுக்ளை எடுத்து வைக்காவிட்டால் யாராவது எடுத்துக்கொண்டு போய் விடுவார்கள்.

            அடுத்த நாளும் கதவைத் திறந்தேன்.  இன்னொரு பெரிய எலி செத்துக் கிடந்தது. பூனை கடித்துப் போட்டிருக்குமென்று தோன்றியது. பூனை ஏன் முழுதாக எலியைக் கடித்து கொதறாமல் இப்படி கொலை செய்துவிட்டுப் போடுகிறது? இதற்குக் காரணம் புரியவில்லை.

            திரும்பவும் மைதிலிக்குத் தெரியாமல் எடுத்துப் போட்டேன்.

            இராத்திரி நகுலன் பற்றி ஒரு கட்டுரைத் தயாரித்துக் கொண்டிருந்தேன்.  ரொமப நேரம் கண் விழிக்க வேண்டியிருந்தது.

நன்றாகத் தூங்கி விட்டேன்.”

            “ஆண்கள் தினத்திற்கு வாழ்த்துகள்,” என்றாள் மைதிலி.

            “நன்றி” என்றேன்

            மணி எட்டாகியிருந்தது. 

            “இன்றைக்கு ஒன்றுமில்லையா?”

            “என்னது?”

            “அது…பால் பாக்கெட்டுகள் எல்லாம் திருடு போகாமலிருந்ததா?”

            “இருந்தது.”

            ஒவ்வொரு நாளும் செத்துப் போய்க்கொண்டிருக்கும் எலிகளைப் பற்றித் தெரியாமலிருந்தால் சரி என்று எண்ணிக்கொண்டேன்.

            மைதிலி மனதிற்குள் சிரித்துக்கொண்டாள். ஆண்கள் தினத்தன்று எலி செத்து வாசலில் கிடந்தது ஏன் சொல்ல வேண்டுமென்று அவளே எலியை அப்புறப் படுத்தி விட்டாள்.

3 Comments on “யாருக்கும் தெரிய வேண்டாம்?”

  1. அருமை

    பால் பாக்கெட் திருடும் நல்லவர்கள் எலியை அப்புறப் படுத்த மாட்டார்கள்

    வேணு

  2. சிறப்பாக வெளிப்பட்டு இருக்கிறது ஒருவருக்கு ஒருவர் மற்றவர் அறியாமல் செய்த செயலில் அன்பு.

Comments are closed.