நாகேந்திர பாரதி/கண்மாய்க் காலம்

காலையிலும் மாலையிலும்
கண்மாய்க்குப் போனதுண்டா
மழைக்காலம் ஆனாலும்
மறக்காமல் குடையுண்டா

வழுக்கி விட்ட களிமண்ணால்
வேட்டியிலே கறையுண்டா
கரையோரக் கல் மேலே
காலோரம் தேய்த்ததுண்டா

கண்மாயைக் கலக்கி விட்ட
தொபுக்கடீர்க் குதியல் உண்டா
இடுப்புத்துணி பிழிந்தெடுத்து
தலை துவட்டி எழுந்ததுண்டா

பரீட்சைக்குப் படிப்பதற்குக்
கரையோரம் கோயில் உண்டா
பால் பருவக் காதலுக்குப்
படிக்கட்டும் அங்கு உண்டா

தண்ணியிலே ஓட்டுச் சில்லை
தத்திப் போக வைத்ததுண்டா
உண்டென்ற பதிலிருந்தால்
இல்லை என்ற ஏக்கம் உண்டா

——————–