கால (அ)காலமாய்




எஸ் வி வேணுகோபாலன்
 
 
ரயில் நிலையத்தில்
காத்திருந்தனர் 
எல்லோரும்
 
ஒரே காத்திருப்பு
ஒரே பரபரப்பு
ஒரே முணுமுணுப்பு
 
எப்போதும் இப்படித் தான் ஆகிறது
 
நிலைய அதிகாரி
பயணச் சீட்டு பரிசோதகர்
வந்தாயிற்று
ஓட்டுனர் நேரத்திற்கு மிக முன்னதாக
 
பிளாட்பாரம் தயார்
ரயில் வந்து நின்று அரை மணி ஆகப் போகிறது
சிக்னல் கூடப் பச்சை விழுந்தாயிற்று
 
விழுந்து அடித்துக் கொண்டு 
ஒடோடிப் போய்ச் சேர்ந்தேன்
காத்திருந்த தோழர்கள்
 
அத்தனை பேர் முறைப்பும்
அத்தனை பேர் வசவும்
அத்தனை பேர் சாபமும்
அத்தனை பேர் வயிற்று
எரிச்சலும்
 
சிரித்துக் கொண்டே
ஏற்றபடி நீட்டினேன்
என்னிடம் இருந்த
அத்தனை பேர்
பயணச் சீட்டுகளும்
வழக்கம் போலவே.
 
                       

10 Comments on “கால (அ)காலமாய்”

  1. நண்பரே
    இனிமேலாவது பயணச்சீட்டுகளை மற்றவரிடம் கொடுத்து விடவும். வசவும் முறைப்பும் சாபமும் வயிற்றெரிச்சலும்‌ வேண்டாம்.

    கவிதை மிக அருமை.

  2. ஊழியர் சங்கத் தலைவர்கள் எப்போதும் இப்படித்தான்! தங்களுக்காக மற்றவர்கள் தவிப்புடன் காத்திருப்பதை ரசித்து மகிழும் பரந்த நெஞ்சம் உடையவர்கள்!

    அது சரி, இது கட்டுரையா இல்லை கவிதையா?

    1. இதுதான் தலைமுறை இடைவெளி பயணச்சீட்டை வாட்ஸ்அபபில் அணுப்பிவிட்டு தாமாதமாக வந்தால் நீங்கள் வரவேண்டும் என்ற பதைபதைப்பு மட்டுமே அவர்கள் படபடப்பை குறைத்திட வாய்ப்புண்டு

  3. உங்களைப்பற்றி தெரியாதா. வரும் வழியில் யாருக்காவது உதவி விட்டு வரும் போது கால தாமதம் ஆகத்தானே செய்யும்.

  4. அடுத்தவருக்கான ஆயிரம் வேலைகள். அதையும் முடித்த புன்னகை. அது புரியாத தோழர்களுக்கு இயல்பான ‘இவன் இப்படித்தான்……பெரிய பாடாய்ப் போச்சு’ என்ற பதைபதைப்பு.

  5. அருமை. எனி னும் தற்சமயம் காலம் மாறி விட்டது. டிக்கெட் ஃபோன் மூலமாக பகிர லாம் காம்ரேட்.

Comments are closed.