
அவன்
மனைவி மக்கள் ஒதுங்கிட
அக்கம் பக்கம் ஒதுக்கிட
தனியாகி போன
தனியறை வாசி.
இருக்கையில சாய்ந்து இருந்தவனை நிமிர
செய்தது
தொலைவில் கேட்ட
வெடிகுண்டு சத்தம்
இரண்டாவது சத்தமும்
மக்களின் ஓலமும்
அவனை எழ வைத்தது
கதவை ஒருக்களித்து
திறந்து கூட்டமாய் ஒடும்
ஊராரை பார்க்கையில்
மீண்டும் கேட்டது
குண்டு வெடிக்கும் ஓசை.

சாவுக்கு பயந்த ஓட்டம்
தனக்கும் அதற்கும்
எந்த சம்பந்தமும் இல்லை
என்பதை போல சலனமின்றி
கதவை மூட போகும் போது
அந்த காட்சி கண்ணில் பட்டது
அவள் இடுப்பில் ஒரு குழந்தை
அவள் கையை பிடித்தபடி
ஒரு குழந்தை
அவள் ஆடையை பிடித்தபடி
ஒரு குழந்தை
அந்த தாய்
குழந்தைகளின்
வேகத்துக்கு ஏற்ப
மெதுவாக ஓட முடியாமல்
ஓடிக்கொண்டிருந்தாள்.
ஒரு எட்டில் அவர்கள்
அருகில் சென்றவன்
குழந்தைகள் இரண்டையும்
தூக்கிக்கொண்டு
அந்த தாயுடன் சேர்ந்து
ஓடலானான்.

தன்னல மனிதனில் திடீரென ஏற்பட்ட மாற்றம் கவிதைக்கு மிகப்பெரிய திருப்பம் அற்புதமான கவிதை வாழ்த்துகள் ஐயா