தலைவன் இருக்கின்றான்.!


ஆர்க்கே.

அவன் பிறந்தநாளில்
அவன் உருவப் படத்திற்கு
ஒரு மாலையணிவிப்பு.
மூன்று கை நிறைய
ஒரு பூச்சொரிவு.
ஒரு பணிவான கரக்குவிப்பு
குழுவாய் நின்றொரு படமெடுப்பு.
வாசிப்பாய்
சீட்டில் எடுத்தெழுதிவைத்திருந்த
ஒரு வாழ்த்துப்பா.

அவன் இறந்தநாளில்
சட்டைப்பையிடத்தில்
கறுப்புநிற சிறிய துணி
உருவப்படத்தின் முன்
மும்முறைப் பூச்சொரிவு.
சற்றே கலங்கலாய் விழிகள்.
எழுதிவைத்து வாசிக்க
சிறியதாய் ஒரு இரங்கற்பா.

தலைவன் பிறந்து வாழ்ந்து
சாதனையென சில செய்து
காலத்துள் கரைந்து
இறந்தும் போயாச்சு .

அதாச்சு பலகாலம்.

எங்களுக்கு அவன்தானே
சுடர்விளக்கு. வழிசொல்லி.
மற்ற நாட்கள் கிடக்கட்டும்.

இந்த பிறந்த இறந்த
இரு நாள்களில் மட்டும்
மற்றவர்களைவிட சற்றதிகமாய்
எங்களுக்காய் எப்போதும்
தலைவன் இருக்கின்றான்.

3 Comments on “தலைவன் இருக்கின்றான்.!”

  1. இந்த பிறந்த இறந்த
    இரு நாள்களில் மட்டும்
    மற்றவர்களைவிட சற்றதிகமாய்
    எங்களுக்காய் எப்போதும்
    தலைவன் இருக்கின்றான்

    அருமையானா வரிகள்.

  2. இருக்கும் பொழுது எதனையும் செய்யார்;
    பிறப்பை இறப்பை பெருமைசெய்து தன்நிறத்தை
    மாற்றி, விளம்பர மாயையில் வீழ்வதைத்
    தூற்றும் கவிநயம் தூள்!

    அருமை ஆர்.கே. வாழ்த்துகள்.

  3. நல்ல கவிதை. ஓர் ஐயம் “மற்றவர்களைவிட சற்றதிகமாய் எங்களுக்காய் ” “மற்றவர்களுக்கு விட சற்றதிகமாய் எங்களுக்காய்”
    உருபு மயக்கமா?!

Comments are closed.