
தத்துவம் – மூடபக்தி
ஆனால், இங்கிலீஷ் பள்ளிக்கூடத்திற்குப்போய் தேறினவர்களிடம் மனசாக்க்ஷிப்படியும் தன் அறிவுப் பயிற்சியின் விசாலத்திற்குத் தகுந்தபடியும் நடக்கும் யோக்யதை மிகமிகக் குறைவாக இருக்கிறது. இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் எத்தனையோ சாஸ்திரங்கள்-நிஜ சாஸ்திரங்கள், பொய் சாஸ்திரங்கள் இரண்டுங் கலந்தன-எத்தனையோ விதச் சாஸ்திரங்கள் பயிற்றுகிறார்கள்.
ஆனால் ஸ்வதந்திரம், ஆண்மை, நேர்மை, உண்மை, வீர்யம்-இவை அத்தனை ஜாக்கிரதையாகக் கற்றுக் கொடுப்பதில்லை. அதிலும் ஒருவன் தன் மனமறிந்த உண்மையின்படி ஒழுக வேண்டுமென்றும், அங்ஙனம் ஒழுகாதிருத்தல் மிகவும் அவமானமும் பாவமுமாகும் என்றும் கற்றுக் கொடுக்கும் வழக்கமே இல்லை. இந்த விஷயத்தைக்கூட வாய்ப்பாடமாய்ப் படிப்பித்துக் கொடுக்கிறார்கள். ஆனால் ஒழுக்கப் பயிற்சி இல்லை. “புஸ்தகத்துக்கும் வாய்ப்பேச்சுக்கும் செய்கைக்கும் இடையே லக்ஷம் யோசனை தூரமாக நடப்பவர்களுக்கு த்ருஷ்டாந்தம் காட்டப் புகுமிடத்தே, நமது நாட்டில் இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் தேறிவரும் மனிதரைப்போல் இத்தனை சிறந்த த்ருஷ்டாந்தம் வேறெங்கும் கிடைப்பது மிகவும் துர்லபமென்று தோன்றுகிறது.
“கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல் வேறு பட்டார் தொடர்பு”
என்று திருவள்ளுவர் பாடியிருக்கிறார்.
இதன் பொருள்-வாய்ப்பேச்சு ஒரு மாதிரியாகவும் செய்கை வேறொரு மாதிரியாகவும் உடையோரின் உறவு கனவிலும் கொள்ளுதல் தீது-என்பதேயாகும். பி.ஏ., எம்.ஏ. பரீக்ஷைகள் தேறி, வக்கீல்களாகவும், உபாத்தியாயராகவும், என்ஜினீயர்களாகவும், பிற உத்தியோகஸ்தராகவும் வாழும் கணக்கில்லாத ஐயர், ஐயங்கார், பிள்ளை முதலியவர்களில் எவராவது ஒருவர் தம் வீட்டுக்கல்யாணத்துக்கு லக்னம் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று நிறுத்தியிருப்பாரா?”பெண் பிள்ளைகளின் உபத்திரவத்தால் இவ்விதமான மூடபக்திகளுக்குக் கட்டுப்பட்டு வாழும்படி நேரிடுகிறது” என்று சிலர் முறையிடுகிறார்கள். பெண் பிள்ளைகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுக்க வேண்டும். மூடத்தனமான, புத்திமான்கள் கண்டு நகைக்கும் படியான செய்கைகள் செய்ய வேண்டுமென்று ஸ்திரீகள் பலனின்றிப் “பிதற்றுமிடத்தே அவர்களுடைய சொற்படி நடப்பது முற்றிலும் தவறு. மேலும் அது உண்மையான காரணமன்று, போலிக்காரணம். நம்மவர் இத்தகைய ஸாதாரண மூட பக்திகளை விட்டுவிலகத் துணியாமலிருப்பதன் உண்மையான காரணம் ”வைதிகரும் பாமரரும் நம்மை ஒருவேளை பந்தி போஜனத்துக்கு அழைக்காமல் விலக்கிவிடுவார்கள்” என்பதுதான். இங்கிலீஷ் படித்த மேற்குலத்து ஹிந்துக்கள் கணக்கில்லாத மூட பக்திகளைக் கை விலங்குகளாகவும், கழுத்து விலங்குகளாகவும் பூட்டிக்கொண்டு தத்தளிப்பதன் தலைமைக் காரணம் மேற்படிபந்தி போஜனத்தைப் பற்றிய பயந்தான். அதைத் தவிர வேறொன்றுமில்லை. அந்த மெய்யான காரணத்தை மறைத்துவிட்டு ஸ்திரீகளின் மீது வீண்பழி சுமத்தும் இந்த வீரர்கள் மற்றும் எத்தனையோ விவகாரங்களில் தம்மினத்து மாதரை விலையடிமைகள் போலவும், விலங்குகள் போலவும் நடத்தும் விஷயம் நாம் அறியாததன்று. எண்ணில்லாத பொருள் நஷ்டமும் கால நஷ்டமும் அந்தக்காரணத்தின் இகழ்ச்சியும் உலகத்து அறிஞரின் நகையாடலும் ஸத்யதெய்வத்தின் பகைமையும் சிறிதென்று கொண்டீர்! பந்தி போஜனஸ்வதந்திரம் பெரிதென்று கொண்டீர்! தைரியமாக நீங்கள் உண்மை என்று உணர்ந்தபடி நடவுங்கள். பந்தி போஜனம் சிறிது காலத்துக்குத்தான் உங்களுக்குக் கிடைக்காதிருக்கும். பிறகு உங்கள் கூட்டத் தொகை அதிகமாகும். ஸத்ய பலம் முதலிய பல காரணங்களால் மேற்படி பந்தி போஜனமும் உங்களுக்கு ஸித்தியாய்விடும். தைர்யமாக வேலை செய்யுங்கள்.
சி. சுப்ரமணிய பாரதியார்/தத்துவம் – மூடபக்தி – விருட்சம் நாளிதழ்

One Comment on “சி. சுப்ரமணிய பாரதியார் கட்டுரைகள்”
Comments are closed.