ஸரோஜா ராமமூர்த்தி/இருளும் ஒளியும்

  1. டில்லியிலிருந்து

கல்யாணத்திற்காக ராஜமையர் விசேஷ ஏற்பாடுகள் எல்லாம் செய்திருந்தார். வீட்டைச்சுற்றி பெரிய கொட்டாரப் பந்தல் போட்டிருந்தது. விருந்தினர்கள் தங்குவதற்காகவும் சம்பந்தி வீட்டார் தங்குவதற்காகவும் இரண்டு வீடுகள் வேறு வாடகைக்கு அமர்த்தினார். அந்த ஜில்லாவிலேயே கைதேர்ந்த சமையற்காரர்களை ஏற்பாடு செய்தார். சீர் வரிசைகளும், மற்ற ஏற்பாடுகளும் விமரிசையாகவே இருந்தன. ‘இன்னொரு பெண் இருக்கிறாளே; கொஞ்சம் நிதானமாகத்தான் செலவு செய்யுங்களேன்” என்று மங்களம் அடிக்கடி அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
பிரபலமான நாதஸ்வர வித்வானை வரவழைக்க அவர் ஏற்பாடு செய்திருந்தார். மாப்பிள்ளை ரகுபதிக்குச் சங்கீதம் என்றால் பிடித்தம் அதிகம் என்று சந்துரு அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தான். ‘பாட்டுக் கச்சேரிக்கு நல்ல பாடகராக யாரையாவது அமர்த்தலாம்’ என்று ராஜமையர் கூறியபோது, சந்துரு அவரைத் தடுத்துவிட்டான். எங்கே ஸரஸ்வதியின் வீணாகானத்தையும், தேனைப்போல் இனிக்கும் அவள் குரல் இனிமையையும் கேட்க முடியாமல் போய்விடுமோ என்கிற கவலை தான் காரணமாக இருக்கவேண்டும். ”அந்தப் பெண்தான் கொள்ளைப் பாட்டு பாடுகிறாளே” என்று மங்களம் வேறு கூறினாள்.
புடைவைகள் வாங்கும் பொறுப்பைச் சாவித்திரியின் இஷ்டப் படி விட்டுவிட்டார்கள். “நம் ஜவுளி தினுசுகளே அறுநூறு ரூபாய்க்குமேல் போய்விட்டதே. இன்னும் மாப்பிள்ளைக்கு எடுக்கும் ஜவுளிகளையும் நீங்களே வாங்குவதாக ஒப்புக் கொண்டிருக்கிறீர்களாமே” என்று கவலையுடன் மங்களம் ஜவுளிக்கடைப் பட்டியலைப் பார்த்துக் கேட்டாள்.
”த்ஸு! பிரமாதம்… முதல் முதலில் குழந்தைக்குக் கல்யாணம் செய்கிறோம். விட்டுத் தள்ளு இதையெல்லாம். செலவைப் பார்த்தால் முடியுமா?” என்று ஒரே வார்த்தையில் பதில் கூறி முடித்துவிட்டார் ராஜமையர்.
கணவன் வார்த்தையைத் தடுத்துப் பேசி அறியாத மங்களம் பதில் எதுவும் கூறாமல் பட்சணங்களுக்குச் சாமான் ஜாதா மனத்துக்குள் தயாரித்துக்கொண்டிருந்த போது வாசற் கதவை திறந்து கொண்டு தந்திச் சேவகன் உள்ளே வந்து தந்தி ஒன்றை ராமையரிடம் கொடுத்துவிட்டுச் சென்றான்.
தந்தியைப் பிரித்துப் பார்த்தவுடன் அவர் முகம் சந்தோஷத்தால் மலர்ந்தது. சில வருஷங்களாகப் பார்க்காதிருந்த அவர் சகோதரி பாலமும், அவள் குழந்தையும் வருவதாகச் செய்தி எத்திருந்தது.
“பாலம், நாளைக் காலை வண்டிக்கு வருகிறாளாம். மாப்பிள்ளை ராமசேஷு தந்தி கொடுத்திருக்கிறார். நாத்தனாரும், மதனியும் வருஷக் கணக்கில் சேர்த்து வைத்திருக்கும் விஷயங்களைப் பேசித் தீர்த்துவிடுவீர்கள்” என்று சிரித்துக் கொண்டே கூறிவிட்டு அந்தச் செய்தியைத் தாயினிடம் தெரிவிப்பதற்காக ஊஞ்சலில் படுத்திருக்கும் அம்மாவைத் தேடிக்கொண்டு போனார் அவர்.
நாத்தனார் வரப்போகிறாள் என்பது தெரிந்தவுடன் மங்களம் மிகவும் சந்தோஷம் அடைந்தாள். பாலம் எங்கே வர முடியாதென்று எழுதி விடுகிறாளோ என்று மங்களம் – கவலைப் பட்டுக்கொண்டிருந்தாள். “கல்யாணத்தில் சம்பந்திகளைக் கவனிப்பது போல் தன்னையும் கவனிக்கவில்லை என்று பாட்டியிட மிருந்து புகார்கள் கிளம்பும். பாலம் வந்து விட்டாளானால், ‘உன் அம்மாவின் வேலைகளை நீ கவனித்துக் கொள்’ என்று அவளிடம் ஒப்படைத்துவிடுவேன். மாப்பிள்ளைக்கு ’அவளை முன்னாடி அனுப்பச் சொல்லிக் கடிதம் போட்டுவிடுங்கள்” என்று ராஜமையரைத் தினம் தொந்தரவு செய்துவந்தாள் மங்களம்.
பாலத்தின் கணவர் ஒரு வியாதிக்கார மனுஷர். நல்ல கல்வி ஞானமும், சம்பாதிக்கும் திறமையும் அவருக்கு . இருந்த போதிலும் ஆரோக்ய பாக்கியத்தை இழந்து சதா மருந்து சாப்பிட்டுக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். ஆகவே கடந்த ஏழு வருஷங்களாக அன்பைச் சொரிந்த தமையனையும், ஆசையுடன் பராமரித்த மதனியையும், தாயையும் மறந்து கணவனுடனேயே பிறந்தகம் வராமல் தங்கிவிட்டாள் பாலம், எட்டு மாதக் குழந்தையாக டில்லிக்குப் போன பத்மா இப்பொழுது எட்டு வயதுக் குழந்தையாக மாறி இருந்தாள்.
ஊரிலிருந்து அடுத்த நாள் காலையில் ராமசேஷவும், பாலமும், பத்மாவும் வண்டியிலிருந்து இறங்கிய போது வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் அடையாளம் தெரியாமல் மாறி இருந்தார்கள்.
“வாடி அம்மா பாலம்! வா அப்பா ராமு” என்று ராஜமையர் தங்கையையும் அவள் புருஷனையும் வரவேற்றார்.
பழக்கம் இல்லாத புது மனிதர்களைப் பார்த்து பத்மா, தாயின் அருகிலேயே நின்றுகொண்டிருந்தாள். “பத்மாதானே இது? வாடி என் கண்ணே ” என்று பாட்டி ஆசையுடன் பேத்தியை இழுத்துக் கட்டிக்கொண்டு அவள் கன்னத்தை வருடினாள்.
“மன்னி! நீதான் என்ன இவ்வளவு கிழவியாகிவிட்டாயே? மாப்பிள்ளை வருவதற்கு முன்னாடியே கிழமாகப் போய் விட்டாயே மன்னி!” என்று பாலம் சந்தோஷத்தில் சொன்ன வார்த்தைகளையே திருப்பித் திருப்பிச் சொன்னாள்.
இப்படி ஒருவருக்கொருவர் சந்தோஷ மிகுதியில் நேரம் போவது தெரியாமல் நின்றுகொண்டே பேசினர். நாத்தனாருடன் எவ்வளவோ பேசவேண்டுமென்று நினைத்திருந்த மங்களம் பிரமித்துப்போய் பாலத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்,
“என்ன அம்மா, அத்தையை விழுங்கிவிடுவதுபோல் பார்க்கிறாயே! அத்தை எந்தக் கடையில் டில்லியில் அரிசி வாங்கினாள் என்று கேட்க வேண்டும்போல் இருக்கிறதா உனக்கு?” என்றான் சந்துரு.
“ஆமாம், ஆமாம்; பாலம் கொஞ்சம் பருத்துத் தான் இருக்கிறாள்” என்று தலையை ஆட்டிப் பிள்ளை கூறுவதை ஆமோதித்தார் ராஜமையர்.
”சரி, சரி, மணி ஆகிறது. அவாள் எல்லாம் சாப்பிட்டு எத்தனை நாள் ஆச்சோ? எழுந்து ஸ்நானம் செய்யப் போகட்டும்” என்று கூறி மங்களம் உள்ளே சென்றாள்:
சாப்பாடு முடிந்த பின்னர் பாலம் சாவித்திரிக்காக வாங்கியிருக்கும் வெள்ளிப் பாத்திரங்கள், புடைவைகளைப் பார்வை யிட்டாள். வெள்ளியில் வாங்கியிருந்த குடத்தைப் பார்த்து விட்டு, “ஆமாம் மன்னி! குடம் பித்தளையில் வாங்குவது தானே? வெள்ளிக் குடத்திலா சாதாரணமாக நாம் ஜலம் கொண்டு வருகிறோம்?” என்று கேட்டாள்.
“அதென்னவோ அம்மா! பெட்டியிலே தூங்குவதற்காக எத்தனை புடைலைகள், நகைகள், பாத்திரங்கள் செய்தாக வேண்டுமோ? அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை வாங்கிவிட்டு மிகுதிப் பணத்தைப் பயனுள்ளதாகச் செலவழித்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும். நாலு பேர் மெச்சிப் புகழவேண்டும் என்பதற்காகவே பணத்தை இப்படி விரயம் செய்யவேண்டி இருக்கிறது” என்றாள் மங்களம்.
“என்னதான் பணம் காசு இருந்தாலும் நம் கல்யாணத்தின் போதெல்லாம் இந்த மாதிரி டாம்பீகச் செலவு குறைவாகத்தான் இருந்தது; இல்லையா மன்னி? இப்படிக் கண்டபடி பணத்தை வாரி இறைக்கிறார்கள். சாப்பாட்டுப் பண்டங்களை அழ்க வைத்தும் ஊச வைத்தும் குப்பையிலே கொட்டுகிறார்கள். டில்லியில் ஒரு கல்யாணம் நடந்தது. தடபுடலாக ஒர வைபவமாகத்தான் நடத்தினார்கள். வந்தவர்கள் வந்தபடி இருந்தார்கள். ஆனால் அந்தக் கல்யாணத்துக்காக இரவு பகலாக உழைத்த வேலைக்காரர்களுக்கு நிறுத்துத்தான் சாப்பாடு போட்டார்களாம். பலகாரங்களைப் பூட்டிவைத்து ஊசிப்போன பிறகு எடுத்துக் கொடுத்தார்களாம்! எப்படி இருக்கிறது விஷயம்?” என்று ஆத்திரத்துடன் பேசினாள் பாலம்.
“அத்தை, டில்லிக்குப் போன பிறகு நன்றாகப் பேசக் கற்றுக் கொண்டு இருக்கிறாள். அடிக்கடி சட்டசபை கூட்டங்களுக்குப் போவாயாமே, அத்தை!” என்று கேலி செய்தாள் சாவித்திரி.
“என்னவெல்லாமோ பேசிக் கொண்டிருக்கிறேனே, முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டு. ஏண்டி சாவித்திரி! உனக்கு வரப்போகிற ஆத்துக்காரர் எப்படி இருக்கிறார்? சிவப்பா, கறுப்பா” என்று சாவித்திரியைப் பார்த்துக் கேட்டாள் பாலம்.
“போ அத்தை! நான் சரியாகக் கவனிக்கவில்லை” என்று வெட்கத்துடன் கூறினாள் சாவித்திரி.
“பொய்யைப் பார் பொய்யை! இவள் மனசில் தான் என்ன இருக்கிறதோ? கேட்டுக் கொள் அத்தை. மாப்பிள்ளைக்குப் பாட்டு என்றால் ஆசையாம். இவளை அவர் பாடச்சொன்ன போது இவள் அவரை விழித்துப் பார்த்தாளே? அப்பொழுது அவர் சிவப்பா, கறுப்பா என்று தெரியவில்லையாமா இவளுக்கு?” என்று கேட்டுச் சீதா, சாவித்திரியை மேலே பேசவிடாமல் தடுத்தாள்.
“இந்த வாயாடியுடன் என்ன பேச்சு வேண்டி இருக்கிறது?” என்று கூறிவிட்டு சாவித்திரி ‘சடக்’ கென்று எழுந்து அப்பால் சென்றாள்.

இருளும் ஒளியும் /ஸரோஜா ராமமூர்த்தி – விருட்சம் நாளிதழ்

One Comment on “ஸரோஜா ராமமூர்த்தி/இருளும் ஒளியும்”

Comments are closed.