மாலன்/கரிச்சான் குஞ்சுவைப் பற்றி…

தி.ஜானகிராமனின் மிக நெருங்கிய நண்பர் கரிச்சான் குஞ்சு. தி.ஜா.வின் இளமைக்கால அந்தரங்கங்களை அறிந்தவர். கரிச்சான் குஞ்சுவின் தந்தை தி.ஜா.வின் தந்தையின் சீடர். பழுத்த வைதீக குடும்பம்.ஆனால் கரிச்சான் குஞ்சுக்கு 8 வயது இருக்கும் போது அவரது தந்தை இறந்து போனார். வறுமையில் உழன்றது குடும்பம். அதனால் எட்டாவது வயதில் வேத பாடசாலைக்கு அனுப்பப்பட்டார். வேதபாடசாலையில் வேதக் கல்வியும் சாப்பாடும் இலவசம். அங்கேயே தங்கிப் படிக்க வேண்டும்.(அந்த வேதபாடசாலைதான் ‘அம்மா வந்தாளில்’ வரும் வேத பாடசாலை) பள்ளிக்கூடம் என்றால் என்னவென்றே தெரியாது வளர்ந்த கரிச்சான் குஞ்சு 16 வயதில் வேதக் கல்வியை முறித்துக் கொண்டு வேதபாடசாலையிலிருந்து வெளியேறினார். குடும்ப்ப் பொருளாதாரம் ஒன்றும் பெரிதாக மேம்பட்டுவிடவில்லை. ஆனால் ஒரு புரோகிதராக வாழ்க்கை நடத்த அவருக்கு மனம் ஒப்பவில்லை. அப்போது தமிழ்ப் பண்டிதர்களை உருவாக்க ‘ஓரியண்டல் ஸ்டீஸ்’ என்று ஒரு படிப்பு இருந்தது. நுழைவுத் தேர்வி எழுதி வெற்றி பெற்றால்தான் சேர முடியும். கரிச்சான் குஞ்சு அதில் தேறி அந்தப் படிப்பில் சேர்ந்தார்.

ஒரு முறை தி.ஜா.வின் அறைக்குப் போயிருந்த கரிச்சான் குஞ்சு அங்கிருந்த பாரதியார் கவிதைகள் நூலைப் படிக்க எடுத்துக் கொண்டு வந்தார். முதல் வாசிப்பிலேயே அவரைக் கிறங்க அடித்தான் பாரதி. கவிதைகளை வாய்விட்டுப் படிப்பதும், பாடுவதுமாக இருந்தார். அப்போது இந்தியா விடுதலை பெற்றிருக்கவில்லை. பாரதியைப் படிப்பது குற்றம் எனச் சொன்ன அவரது ஆசிரியர்கள் அதை நிறுத்தச் சொன்னார்கள். கரிச்சான் குஞ்சுக்கு அதில் சம்மதம் இல்லை. அவர்கள் முன் தலையை ஆட்டிவிட்டு, தனியே வந்து ரகசியமாகப் படிக்கும் போது ஓர்நாள் கையும் களவுமாகப் பிடிபட்டார். இரண்டு நாளைக்குச் சாப்பாடு கிடையாது என்றும் பாடசாலையை விட்டு வெளியேற வேண்டும் என்றும் தண்டனை விதிக்கப்பட்டது. அவரிடமிருந்த பாரதியார் கவிதைகள் பறித்து வீசப்பட்டன.

குலைப்பட்டினி கிடந்த அந்த நாள்களை, பின்னால் சிரித்துக் கொண்டே நினைவு கூர்ந்து, “பாரதி, படிப்பவனுக்கு பசி கொடுப்பான்” என சிலேடையாகச் சொல்லி கடகடவென்று சிரிப்பார்

பாரதி எங்களை நெருங்கச் செய்தான். ஆனால் அவனைப் பற்றிய புதிய வெளிச்சங்கள் எனக்கு அவரிடமிருந்து அதிகம் கிடைக்கவில்லை. அவர் எதிரொலித்த கு.ப.ரா, சிட்டியின் கருத்துக்களை நான் ஏற்கனவே வாசித்திருந்தேன். ஆனால் உபநிஷதங்கள் மீது அவர் பாய்ச்சிய ஒளி எனக்கு உவகை தந்தது. புதுச்சேரியில் அவர் வீட்டு மாடி வராந்தாவில் ஒரு இரவு முழுக்க இருளில் உட்கார்ந்து கதோ உபநிஷதம் பற்றி உரையாடியிருக்கிறோம். இலக்கியத்தில் த்வனியின் முக்கியத்துவம் குறித்துப் பேசும் த்வனியாலோகத்தை எனக்கு அறிமுகப்படுத்தியவரும் அவர்தான்

இலக்கிய வாசிப்பும், தமிழ்ப் பற்றும்,வேதக் கல்வியும் அவரது புலமையைச் செழுமைப்படுத்தியிருந்தன. அவர் ஞானஸ்தர் என்பதில் நண்பர்கள் யாருக்கும் கிஞ்சித்தும் சந்தேகமில்லை. ஜெயகாந்தன் அவரை பண்டிதர் என்றுதான் பிரியமாய் அழைப்பார். ஆனால் அவரது சகாக்களுக்குக் கிடைத்த அளவு வாசக அங்கீகாரம் அவருக்குக் கிடைக்கவில்லை. அவர் புத்தகங்கள் ஒவ்வொன்றும் பெரும் போராட்டத்திற்கும் மன்றாடலுக்கும் பின்னரே வெளிவந்தன.

One Comment on “மாலன்/கரிச்சான் குஞ்சுவைப் பற்றி…”

Comments are closed.