தி சோ வேணுகோபாலன் கவிதைகள்- வெள்ளம்

தொகுப்பாசிரியர் : அழகியசிங்கர் 

    வழியாடிக்
    கரைசாடி
    விம்மிப் புடைத்துறுமி
    வருகின்ற
    வெள்ளம் சிவமதமா?
    இல்லை வெறுந்துயரா?

    தாளம் தவறியதா?
    கோளின் கதிபிசகா?

    தாளம் தவறியதால்
    கோளில் கதிபிசகால்
    மேலே பனிமுடியில்
    காலும் நொடித்ததனால்
    கட்டுச் சடைபிரிய
    கங்கை விடுதலையாய்
    கொட்டி முழக்கிடுமோர்
    கோரச் சிரிப்பொலியா?

    வெள்ளம் சிவமதமா?
    இல்லை வெறும் துயரா?

    குடிசை பொடியாக்கி
    குழைத்து நிறம் சிவந்த
    வெள்ளம் சிவன் நடமா?
    இல்லை பயங்கரமா?

    மீன் துள்ளு மேனி:
    மாட்டுச் சுமையுண்டு
    சுற்றிச் சடலங்கள்
    சூழ்ந்து வருகின்ற
    வெள்ளம் சிவமதமா?
    இல்லை சிவன்மதமா?