
ஒரு முறை சுஜாதா என் வீட்டுக்கு வந்தபோது என்னிடம் காமிராவும் இருந்தது, புகைப்படச்சுருளும் இருந்தது. புகைப்படங்கள் எடுத்தோம். இது நடந்து முப்பது ஆண்டுகள் இருக்கும். எனக்கு வீட்டில் முன் வெராந்தாவில் ஐந்தடிக்கு ஐந்தடி இடம். இதில் ஒரு மேஜை, ஒரு சிறிய அலமாரி, மூன்று நாற்காலிகள். வெராந்தாவுக்கு என்றிருந்த கம்பி டிரெல்லியை அலமாரிகளாக மாற்றி அவற்றில் சில புத்தகங்கள். குறிப்பாக அகராதிகள்.
எழுத்தில் ஆர்வம் உள்ள வெளியூர்த் தமிழர்கள் பலர் என் வீட்டுக்கு வருவதற்குப் பல காரணங்களில் ஒன்று, நான் பகல் வேளைகளில் கூட வீட்டில் இருக்கும் வாய்ப்பு உண்டு. இரண்டாவது, சிறிதும் தயங்காமல் அவர்கள் விரும்பும் சில எழுத்தாளர்களிடமும் பதிப்பாளர்களிடமும் அழைத்துச் செல்வவேன்.
சுஜாதா முதலில் டில்லியிலும் பிறகு பெங்களூரிலும் இருந்த நாட்களில் சென்னைக்கு வருவதாயிருந்தால் அவர் சென்னையில் தங்கிப் போகும் முகவரியை முன்கூட்டியே கடிதம் எழுதித் தெரிவித்துவிடுவார். (அப்போது தொலைபேசி கிடையாது. முதலில் ஒருநாள் அவர் என் வீட்டுக்கு வந்து விடுவார். அடுத்த நாள் அல்லது அதற்கடுத்த நாள் நான் அவர் கொடுத்த முகவரிக்குச் சென்று அவரைப் பார்ப்பேன்.
எங்கள் இருவருக்கும் நான்காண்டுகள் வயது வித்தியாசம். இருவரும் ஒரே மாதிரிப் புத்தகங்களைப் படித்திருப்போம். நான் ஹரோல்டு ராபின்ஸ் ரசிகனல்ல. ஆனால் அன்று பிரபலமாக இருந்த ஜான் ல கார், அல்ஸ்டேர் மக்ளின் புத்தகங்களைப் படித்திருந்தேன். இதெல்லாம் சராசரிகள் படிக்கும் புத்தகங்கள். நாங்கள் இவற்றையும் படித்து கார்லோஸ் காஸ்டனீடா என்று அப்போது படித்த மேதாவிகள் நடுவே மிகவும் பேசப்பட்ட ஓர் ஆசிரியரையும் படித்திருந்தோம். எங்கள் இருவருக்கும் காஸ்டனீடாவின் நம்பகத்தன்மை பற்றிச் சந்தேகம்.
என்னுடைய வழிகாட்டிப் பணியில் சுஜாதாவையும் அவர் அப்போது மிகவும் மதித்த லா.ச.ரா.வைப் பார்க்க அழைத்துச் சென்றேன். நா.பார்த்தசாரதி. அழகிரிசாமி. அப்புறம் அமெரிக்கத் தூதரகக் கிருஷ்ணன்.
கிருஷ்ணன் நிறையத் தமிழ்ப் புத்தகங்களை வாங்குவதோடு அவற்றைப் படித்து விவாதிக்கவும் செய்வார். அந்த நாளில் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அமெரிக்க எழுத்தாளர் அல்லது கவிஞர் சென்னைக்கு வருவதுண்டு. அப்போது அவர் சில சென்னை எழுத்தாளர்களுக்கு அழைப்பிதழ் அனுப்புவார். இதில் இதர மொழிகளும் இருக்கும். பிரதானமாகத் தமிழ்.
அன்றெல்லாம் அமெரிக்கத் தூதரகத்துக்குப் போவது இன்று போலக் கடினமான காரியம் அல்ல. கிருஷ்ணன் அந்த ஒரு சந்திப்போடுச் சிலரை மட்டும் தனியாகப் பகல் விருந்துக்குக் கூப்பிடுவார். அனந்தமூர்த்தியிலிருந்து ஜி.ரங்கராஜன் வரை நான் பலரை அழைத்துச் சென்றிருக்கிறேன். விருந்து சென்னை பிரசிடன்ஸி கிளப்பில். கிருஷ்ணன் இருபது தோசைகளுக்கு ஏற்பாடு செய்து விடுவார். அந்த கிளப் தோசை பிரசித்தமானது. எனக்குத் தெரிந்து இன்னொரு டில்லி எழுத்தாளர். அங்கு சிறிது உணவு அருந்திவிட்டு முறையானப் பகல் விருந்துக்கு இலக்கியச் சிந்தனை ப. லட்சுமணன் இல்லத்துக்கும் போக வேண்டியிருந்தது. இரண்டுக்கும் நான்தான் துணை. அந்தச் சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. சுஜாதாவுக்குப் பகல் உணவுக்குப் பதில் நான்கு தோசை சாப்பிடுவது பிடித்திருந்ததா என்று நான் கேட்கவில்லை. சிறிது சிரமமான காரியம்தான்.
நான் எடுத்த புகைப்படங்களில் பெரும்பான்மை என் வீட்டிலிருந்தே எடுத்தவை. ஒரு முறை ‘கணையாழி’ அட்டைக்கு அந்தப் புகைப்படங்களில் சிலவற்றைக் கதம்ப வரிசைகள் கொண்ட ஒரு அட்டைப் படமாகச் செய்தேன். அது பலருக்குப் புரியவில்லை. எல்லாமே மிக நல்ல படங்கள். ஒன்று மிகச் சிறப்பானது. அது தி.ஜானகிராமனுடையது. சுஜாதா மறையும் வரை இங்கு சென்னையில் இருக்கும் என் மகன் அது நான் எடுத்தது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தான். இல்லை. உலகப் புகழ் பெற்ற பெங்களூர்வாசியான ஒரு தமிழ்ப் புகைப்பட நிபுணர் எடுத்தது.
நன்றி: தீராநதி

nzxz0v