28.08.2025

ஆசிரியர் பக்கம்
மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
மோகினி: வணக்கம்.
அழகியசிங்கர் : வணக்கம்.
ஜெகன் : ஞாயிற்றுக் கிழமை (24.08.2025) நடந்த கூட்டம் சிறப்பாக நடந்ததுபோல் தோன்றுகிறது.
அழகியசிங்கர் : அப்படித்தான் நினைக்கிறேன். இந்தக் கூட்டம் கடைசிவரை எப்படிப் போகுமென்று தோன்றவில்லை.
மோகினி : எப்படியோ நடத்தி முடித்து விட்டீர்கள்..சிறப்பாகத்தான் நடந்தது நிகழ்ச்சி.
அழகியசிங்கர் : இக் கூட்டம் சிறப்பாக நடக்க இரண்டு போர்கள் முக்கிய காரணங்கள். ஒருவர் டாக்டர் பாஸ்கரன். இன்னொருவர் கிருபானந்தன்.
மோகினி : பரிசு பெற கோயம்புத்தூரிலிருந்து நாகராஜன் என்ற எழுத்தாளர் வந்திருந்தார் போலிருக்கிறது.
அழகியசிங்கர் : இரண்டாம் பரிசு பெற்ற நாகராஜன் வந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவர் கதை சிறப்பான கதை.
ஜெகன் : 24 கதைகள் கொண்ட அசோகமித்திரன் நினைவாகப் பரிசு பெற்ற கதைகள் - 2025 பல சிறப்பான கதைகள் உள்ளன.
அழகியசிங்கர் : ஆமாம். எல்லோரிடமும் இந்தப் புத்தகம் போய்ச் சேர வேண்டும் என்பது என் விருப்பம்.
மோகினி : கதை புரியாவிட்டால் என்ன செய்வது?
அழகியசிங்கர் : இத் தொகுதியில் எல்லாமே புரிகிற கதைகள். அழுத்தமான கதைகள். எந்தக் கதையும் சோடை போகவில்லை
மோகினி : நீங்களே சொன்னால் எப்படி?
அழகியசிங்கர் : அவ்வளவு எளிதாக ஒரு புத்தகத்தைப் பாராட்ட மாட்டார்கள். இது இயற்கை. தமிழ்ச் சூழலில் இதைத் தவிர்க்க முடியாது.
ஜெகன்: யாராவது கூட்டத்தில் சரியாகப் பேசவில்லையா?
அழகியசிங்கர் : ஒருவர் பேசியதுதான் எனக்கு உறுத்தலாக இருந்தது. புத்தகத்தைப் பற்றி அவர் எதுவும் பேசவில்லை. அவர் கவிதைகளைச் சொல்லக் கூட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டார். அவரிடம் ரொம்ப எதிர்பார்த்தேன்.
மோகினி : இப்படி நடக்காமல் இருக்காது. நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.
அழகியசிங்கர் : அசோகமித்திரன் புதல்வர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பு செய்தார்கள். அவர்கள் பேச்சு அசோகமித்திரன் பேசுவதுபோல் இருந்தது.
மோகினி : ஏன் அச்சிதழில் பரிசுப்பெற்ற கதைகளைப் பிரசுரம் செய்கிறீர்கள்?
அழகியசிங்கர் : விருட்சம் அச்சிதழ் ஆயிரம் பேர்களுக்குப் போய்ச் சேருகிறது. புத்தகமாகக் கொண்டு வந்தாலும் அப்படிப் போகாது.
மோகினி : இரவு 9.30 மணி ஆகிவிட்டது. கூட்டத்தை முடித்துக் கொள்ளலாம்.
அழகியசிங்கர் : குட் நைட்.
(இரவு 9.35 மணி)
