விக்ரமாதித்யன் கவிதை

தூத்துக்குடிப் பிள்ளை கடையில்
பொட்டலம் மடித்தவன் நீ
சித்தாளாய்
செங்கல் சுமந்தவன் நீ

கீற்றுக் கொட்டகைகளில்
வேர்க்கடலை விற்றவன் நீ

காயலான் கடையில்
காலம் கழித்தவன் நீ

வீடுவீடாகப் போய்
அழுக்கெடுத்தவன் நீ

வாளியேந்தி
எச்சில் இலை எடுத்தவன் நீ

பத்து வயதில்
ஓடிவந்து
ஓடும் ரயிலில்
பெட்டிபெட்டியாய்த் தாவி
எத்தனை பேர்
உன் காதைத் திருகியிருக்கிறார்கள்.

எத்தனை பேர்
உன் கன்னத்தில் அறைந்திருக்கிறார்கள்.

தென்னக ரயில்வேக்கு இன்னமும்
தீராத கடனிருக்கு.

மறக்கமுடியுமா மாநகராட்சிப் பள்ளியில்
மதிய உணவுக்குத் தட்டேந்தி நின்றதை.

மாயக்கவிதை பண்ண
மற்ற ஆளைப் பாரு.

நான்
தொந்தரவுபட்ட பிள்ளையாய் இருந்தவன்.
இன்னமும்
தொந்தரவுபடும் மனுஷன்தான்.