மீ. விசுவநாதன்/”ஜீவ ஒளி”

கிழக்கு வானைச் சிவப்பாக்கிக்
கீறி மெல்ல வருகிறவன்
பழக்க மான நம்கதிரோன்
பார்க்கப் பார்க்கப் பரவசந்தான்
தழைக்க வேண்டும் தரணியென
தகத கவென ஒளிபொழிவான்
உழைக்க ஊக்க மருந்தாகி
உயிருக் கேற்ற சூடாவான்

குப்பை செத்தை அழுக்கெல்லாம்
குறைக ளின்றிப் பொசுக்கிடுவான்
துப்பும் சுடரைப் பதமாக
புல்லும் கல்லும் கொளவைப்பான்
உப்புச் சுவையாம் கடல்நீரை
உயரே மாற்றி மழைபொழிவான்
எப்பு விக்கும் சமமான
இறைவ னென்றே புகழ்வேனே.

அறிவுத் தெளிவை அளிக்குமொளி
அகந்தைச் சூட்டை தணிக்குமொளி
நெறித வறாத நியாயவொளி
நீருள் நெருப்பாய் மறைந்தவொளி
குறித வறாது பாயுமொளி
கோள்க(ள்) அரச னானவொளி
அறிவ தற்க ரியவொளி
அகத்தில் வாழும் ஜீவவொளி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன