
சந்துரு தன் ஒரே மகனின் பத்தாவது பிறந்த நாளுக்காக பரிசு வாங்க அந்த கடைக்கு தன் அலுவலகத்தில் இருந்து நேரே வந்து காத்திருந்தான் .
அவன் மனைவி ரஞ்சனியும், மகன் சாய் பிரசாத்தும் ஆட்டோவில் வந்து இறங்க , அந்த இசைக் கருவிகள் விற்கும் கடைக்குள் நுழைந்தார்கள்.
"சாய் , உனக்கு கிடார் தானே வேண்டும். வா , அந்த பிரிவுக்குப் போகலாம்" என்றான் சந்துரு .
அந்தப் பிரிவில் நுழைந்ததும் முதலில் அங்கிருந்த வண்ண மாடர்ன் ஓவியம் அவர்களின் கண்ணையும், கருத்தையும் சுண்டி இழுத்தது.
அருகில் போய்ப் பார்த்த சாய்
“அப்பா இவர் தான் பிரபல கிடாரிஸ்ட் பைஜு தர்மாஜன் , நம் கேரளாவில் கொச்சினில் பிறந்தவர். என் மானசீக குரு. இவரால் தான் எனக்கு கிடார் மேல் ஆசையே வந்தது . நானும் ஒரு நாள் இவரைப் போல வாசிக்கணும்பா”
” ஏன் நம் தமிழ் நாட்டுப் பிரசன்னா பிடிக்காதா சாய்? “
“அவரையும் ரொம்ப பிடிக்கும். நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை ” பாட்டு கேட்டிருப்பியே. அந்த பாட்டில் கிடார் இசை நம் மனதை மெல்லிய மயிலிறகைப் போல் வருடும் . நம்மை வேறொரு இனிய உலகிற்கு கூட்டிச் செல்லும்”.
“அப்பா, என் லட்சியமே அது போல் நானும் ஒரு நாள் இந்த கிடாரை இசைத்து எல்லோர் மனங்களிலும் மகிழ்ச்சி மழையைத் தூவணும் “.
“கவலையே படாதே, நானும் உன் அப்பாவும் என்றென்றும் உன் லட்சியத்திற்கு துணை நிற்போம் சாய் ” என்றாள் ரஞ்சனி .
“இதோ உனக்கான பிறந்த நாள் பரிசு “என்று இருவரும் சேர்ந்து கிடாரை அவனிடம் கொடுத்தார்கள் .
