எபனேசர் அருள் ராஜன்/நரம்புகளோடு பேசிக்கொண்டு இருப்பவனின் இசை

தொப்பிக்காரனென்று குழந்தைகளுக்கும் கிட்டார்க்காரனென்று பெரியவர்களுக்கும் அறிமுகமாகியிருந்த ரெங்கனுக்கு வயது 43. நாடோடியல்ல. பைத்தியக்காரனுமல்ல. இந்த இரண்டுக்கும் இடையிலான தூரத்தை இசைக்குறிப்புகளின் வழியாகக் கடந்து கொண்டிருப்பவன். நல்ல குரல்வளம் இருந்ததாலோ என்னவோ நாய்கள் வசியப்பட்டுப்போயிருந்தன. அவைகள் குரைத்து விரட்டுவதில்லை. அவனும் அப்படி நடந்து கொள்வதில்லை. மனிதர்களுக்குச் சிரிப்பை மட்டுமே பதிலாகத் தரும் குணாதிசயத்தை உடைய அவனை யாரும் குறைத்து மதிப்பிட வில்லை. ஒரு மரப்பெட்டியின் மீதமர்ந்து போவோர் வருவோர் கேட்கும் பாடலை நரம்புகளைத்தட்டித் துல்லியமாக இசைப்பான். அவர்கள் சிலாகித்து போவார்கள். ஒரு தேநீர் குடித்து முடித்த ஆசுவாசத்தைத் தன் கிடார் நரம்புகள் வழியாகக் கடத்திவிடும் பேறுபெற்றவனாக இருந்தான் ரெங்கன். அணிந்திருக்கும் சூவும் கணுக்காலில் மடித்துவிட்ட பேண்ட்டும் கழுத்தில் மப்ளரும் தலையில் தொப்பி சகிதமாகப் பெட்டியின் மீது அவனமர்ந்து இசை மீட்டுவது போன்றதொரு தோற்றத்தை வரைந்து தந்த வழிப்போக்கனுக்காக ஆயிரம் ஆயிரம் இசைத் துணுக்குகளை வாசித்தவாறேயிருக்கிறான் தினந்தோறும்…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன