
அம்மா, " எங்க பள்ளியில் அடுத்த வாரம் ஒரு ஓவியப் போட்டி நடக்கப் போகுதுன்னு எங்க வகுப்பாசிரியர் சொல்லி என்னையும் கலந்துக்கச் சொன்னார்" என்றான் ஆறாம் வகுப்பு படிக்கும் அவள் செல்லப்பிள்ளை சந்தோஷ்.
" நீ தான் பார்த்த எல்லாவற்றையும் அப்படியே அச்சடிச்சாப் போல அழகா வரைவியே கண்ணா".
"உங்க அப்பா மாதிரியே உனக்கும் ஓவியம் நல்லா வருது. அவரின் கலை அப்படியே உன் கிட்ட வந்து இருக்கு
அதனால் தான் கலந்துக்கச் சொல்லி இருப்பார்”.
“ஆனால் பாவம் அதைப் பார்க்கக் கொடுத்து வைக்கலை உங்கப்பாவுக்கு . நீ பிறக்கும் முன்பே ஒரு விபத்தில் தவறி விட்டதால் நீயும் அவரை போட்டோவில் தானே பார்த்தே கண்ணா”.
“போட்டிக்கு ஏதும் தலைப்பு உண்டா? என்ன படம் வரையணுமாம்? என்று வரிசையாகக் கேள்வி கேட்டாள் அவன் தாய் சங்கரி.
“நம் மனசுக்குப் பிடித்தவர்களை நினைச்சு அவர்களைப் படமா அதுவும் பென்சில் ஓவியம் தான் வரையணும் மா “
“சரி யாரை வரையப் போறே?.”
“போம்மா அது ரகசியம் , இப்போ சொல்ல மாட்டேன். வரைஞ்சு பரிசு வாங்கி வந்து காட்டுறேன்”.
“நல்லா வரைஞ்சு பழகு சந்தோஷ்”.
போட்டி முடிந்து முதல் பரிசோடு வந்த மகன் காட்டிய அவன் இதுவரை பார்த்திராத தந்தையின் தத்ரூப ஓவியத்தைப் பார்த்து வியந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தபடி அவனை கட்டி அணைத்துக் கொண்டாள் சங்கரி .
