அன்பு கனிந்த கனிவே/🌷.க.சோமசுந்தரி

குட்டிப் போடும் மயிலிறகாய்
தினம் எட்டி எட்டிப் பார்க்கும்
சின்ன சின்ன ஆசைகள்!

அனிச்சையாக நகர்ந்து விட்ட
நாட்களை எல்லாம் அழகாய்
அசைப் போடுகிற நினைவுகள்!

வெகுதூரம் வந்து விட்டாலும்
பயணித்த காலங்களை
ஈரமாக்கி செல்கிற
சிறுபிராய்த்து ஞாபகங்கள்!

இன்றும்! நினைவுத் தேரில்
ஊர்வலமாய் வந்து போகிறது…!!

பூவரசு இலை பீப்பீயும்
பனை ஓலை காத்தாடியும்
தீப்பெட்டியில் ரயில் பெட்டியும்
சாட்டை சுழற்றிய பம்பரமும்
வீதியெங்கும் ஓடியும் சலிக்காத
புழுதிப் படிந்த கால்களும்…
மறக்கத் தான் முடியுமா?
நினைவை விட்டு தான் அகலுமா?

மழையில் விட்டக் கப்பலும்
மாட்டு வண்டியில் பயணமும்
குழியில் அடித்த கோலிக்குண்டும்
பனநொங்கு உருட்டு வண்டியும்
கில்லி அடித்த நாட்களும்…
இன்னும் தான் ஓடுகிறது மனம் முழுக்க…?!

இப்படி..! எத்தனை எத்தனை…?!
புரட்டிப் பார்க்கையிலே
நெஞ்சமெல்லாம்
தேனாய் தான் இனிக்கிறது?!
ஏங்கி தான் கிடக்கிறது
இதுபோல் ஒரு வாழ்வு இன்று…!
இல்லையே…என்று!?

மரப்பாச்சிப் பொம்மைக்கும்
உயிர்க் கொடுத்து உலவிய
சிறுப்பிராய்த்து அன்பை
மறந்து விட்டு…
ஓடும் நமக்குள் என்று
உணரப்படும் மனிதத்தை நேசிக்கும்
அன்பு கனிந்த கனிவான
உன்னதத்தின் உணர்வு…?!

2 Comments on “அன்பு கனிந்த கனிவே/🌷.க.சோமசுந்தரி”

  1. வீதியெங்கும் ஓடியும் சலிக்காத புழுதி படிந்த கால்கள் , மழையில் விட்ட கப்பல், மாட்டு வண்டிப் பயணம் என இளம் பிராய நினை வுகளைத் தூண்டி , அன்பு கனிந்த கனிவுதான் உன்னதமான உணர்வு என அழகாய்ச் சொல்கிறது கவிதை .

Comments are closed.