உடம்புகளில் உயிர்போல வெள்ளம்
தாதுஉகு சோலை தோறும் சண்பகக் காவு தோறும்
போதுஅவிழ் பொய்கை தோறும் புதுமணல் தடங்கள் தோறும்
மாதவிவேலிப் பூக வனம் தோறும் வயல்கள் தோறும்
ஓதிய உடம்பு தோறும் உயிர் என உலாயது அன்றே [32]
உடம்பையும் உயிரையும் உவமைகளாகக் கூறுவது கம்பனுக்கு எப்பொழுதும் வழக்கம். பின்னால் தசரதனை உடம்பாகவும் அவன் நாட்டின் மக்களை உயிராகவும் கூறுவான் அவன். இங்கு ”மகரந்தம் சிந்தும் சோலைகளிலும், சண்பகம் நிறைந்துள்ள சோலைகளிலும், மலர்கள் மலரும் குளங்களிலும், புதிய மணல்தடங்களிலும், மாதவிக்கொடி என்னும் குருக்கத்திக் கொடிகள் வேலியாகப் படர்ந்துள்ள தோட்டங்களிலும் வெள்ளம் புகுந்து வருகிறது” என்கிறான். பல்வேறு நூல்களிலும் சொல்லப்பட்ட உடம்புகளிலும் உயிரானது புகுந்து வருவது போல அது இருந்ததாம்.
கவிஞரின் கற்பனை அவரின் அழகியல் இரசனையை காட்டுகிறது.