கம்பனைக்காண்போம்—21/


மருதம் வீற்றிருக்கும் மாதோ

வளவ. துரையன்

மருத நிலத்தின் ஓர் இயற்கைக் காட்சியைக் கம்பன் நம் கண்முன்னே கொண்டுவந்து காட்டுகிறான்.

அழகான ஒரு சோலையில் மருதம் என்னும் மன்னன் கொலுவீற்றிருக்கிறது. அங்கே மயில்களாகிய ஆடல் அழகிகள் நடனம் ஆடுகின்றன. தாமரைக் கொடிகளாகிய பணிப்பெண்கள் தாமரை மலர்களாகிய விளக்குகளைத் தாங்கி நிற்கின்றன. மேகங்கள் மத்தளங்கள் போல் ஒலிக்கின்றன. நீர் நிலைகளில் தோன்றும் அலைகள் திரைகளாக விளங்குகின்றன. தேனைப் போன்ற இனிமையான மகர யாழின் இசையைப் போல வண்டுகள் பாடுகின்றன. இக்காட்சிகளை எல்லாம் கருங்குவளை என்னும் பார்வையாளர்கள் கண் மலர்த்திப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. தான் காணும் ஒவ்வொன்றையும் ஒவ்வொன்றாக உருவகப் படுத்தித் தன் குறிப்பை அவற்றின் மேல் கம்பன் ஏற்றிக்காட்டும் அருமையான பாடல் இதுவாகும்.


தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கம் தாங்க
கொண்டல்கள் முழவின் ஓங்கக் குவளைகண் விழித்து நோக்க
தெண்திரை எழினி காட்ட தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ! [36]