முடிவு/எம்.டி.முத்துக்குமாரசாமி

எல்லா பயணங்களுமே ஏதோ ஒரு கடற்கரையில் நிறைவடைகின்றன
ஆங்கே
உனக்கு எல்லையின்மையின் விஸ்வரூப தரிசனம் காத்திருக்கிறது
நீயோ
நீ வளர்த்த நாய்க்குட்டி உன்னைப் பின் தொடர்ந்ததா எனக் கவலைப்படுகிறாய்
அதன்
அகன்ற விழிகளில் பிரிவின் ஈரக்கசிவைக் காண விழைகிறாய்
உன்
நெஞ்சக் கூடகன்ற கருநீலப் பறவை கேவுமா கரையுமா எனத் தவிக்கிறாய்
ஏதோ
மூன்று வார்த்தைகளுக்குள் உன் வாழ்க்கையை அடக்க யத்தனிக்கிறாய்
மெதுவாகவே
உணவு, உதை, ஊழ்வினை என முணுமுணுக்கிறாய்
மாயா
உன்னிடமின்றி யாரிடம் உன் துர்க்கனவுகளுக்கு பொதுமன்னிப்பு கோருவது என வியக்கிறாய்
உன்
பார்வைக்கப்பால் அதோ அந்த தரிசனக் காட்சி வியாபகம் பெறுகிறது