கடிதக்கதைகள் – 7 காரும் மனைவியும்/ஜெயராமன் ரகுநாதன்

அன்புள்ள இன்ஸ்பெக்டர், அடையார் போலீஸ் ஸ்டேஷன்:

என் காரைக்காணவில்லை!

வாராவாரம் வெள்ளிக்கிழமை நான் என் நண்பர்களுடன் கூடிப்பேசிவிட்டு வருவேன். இன்று பேசிவிட்டு வந்து பார்த்தால் பார்க்கிங்கில் என் காரைக்காணவில்லை. அது ஹோண்டா சிட்டி, TN 06 U 7077. போதாக்குறைக்கு கார் சாவியையும் காணவில்லை. மறதியில் காரிலேயே வைத்து எவனோ கொண்டு போய்விட்டான் போலிருக்கிறது.

தயவு செய்து கண்டு பிடித்துத்தரவும்

இப்படிக்கு
ராமசாமி

உயர் திரு ராமசாமி அவர்களுக்கு

உங்கள் கம்ப்ளெயிண்ட் கிடைத்தது. செம்மொழிப்பூங்கா எங்கள் ஜூரிஸ்டிக்‌ஷன் இல்லையென்றாலும் நீங்கள் அடையார் வாசி என்பதால் நாங்களே உங்கள் காரை முனைப்புடன் தேடித்தர முயல்வோம். கவலை வேண்டாம்.

இன்றே சென்னையின் எல்லா போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் கார் பற்றின தகவல் அனுப்பிவிடுகிறோம். எவன் காரை எடுத்திருந்தாலும் நிச்சயம் மாட்டிக்கொள்வான். கவலைப்பட வேண்டாம்.

இப்படிக்கு
இன்ஸ்பெக்டர் கதிரவன்

டியர் இன்ஸ்பெக்டர்

எனக்கு கவலை அதிகமாகிவிட்டது! இன்று மாலையிலிருந்து என் மனைவியையும் – அவள் பெயர் திரிபுரசுந்தரி – காணவில்லை. நான் செம்மொழிப்பூங்காவிலிருந்து வந்தபோது அவள் வீட்டில் இல்லை. இரவுக்குள் வந்துவிடுவாள் என்று நினைத்தேன். ஆனால் இதோ இந்தக்காலை வரையில் வரவில்லை. அவளது ஃபோட்டோ இணைத்திருக்கிறேன்.

பி. கு: அவள் காரையையும் எடுத்துக்கொண்டு யாருடனோ ஒடிப்போய்விட்டாள் என்னும் கோணத்தில் யோசிக்க வேண்டாம். எனக்கு வயது எழுபத்தி ஐந்து, அளவுக்கு வயது எழுபத்தி ரெண்டு.

அவளைப்போல மெந்தியக்குழம்பு செய்வதில் எக்ஸ்பர்ட் யாரும் இல்லை. எனவே, ப்ளீஸ் அவளைத்தேடிக்கண்டு பிடித்து விடுங்கள்.

அன்புடன்’
ராமசாமி

உயர்திரு ராமசாமிக்கு

உங்களுக்கு ஒரு நற்செய்தி! உங்கள் மனைவி இன்னும் கிடைக்க வில்லை!

இல்லை இல்லை, நான் சொல்ல வந்து, உங்கள் கார் கிடைத்துவிட்டது. ஆயிரம் விளக்கு போலீஸ் ஸ்டேஷன் பிடித்து வைத்திருக்கிறார்களாம். நான் அவர்களுக்கு லெட்டர் எழுதிவிட்டேன். விரைவில் காரை அனுப்பிவிடுகிறோம்.

மனைவியைத்தேடிக்கொண்டிருக்கிறோம்.

இப்படிக்கு
இன்ஸ்பெக்டர் கதிரவன்

டியர் இன்ஸ்பெக்டர்

மிக்க நன்றி. ஆனால் எனக்கு கவலை அதிகமாகிறது. மனைவி கிடைப்பாளா? இன்றோடு மெந்தியக்குழம்பு சாப்பிட்டு ஒரு மாசத்துக்கு மேல் ஆகிவிட்து.

இப்படிக்கு
ராமசாமி

உயர்திரு ராமசாமி அவர்களுக்கு

ஆயிரம் விளக்கு போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வந்த கடிதம் இணைத்திருக்கிறேன். அதைப்படித்தால் உங்களுக்கு விவரம் புரியலாம்.

இணைப்புக்கடிதம்:

அடேய் கணவா!
“நேற்று உங்களை செம்மொழிப்பூங்காவில் டிராப் செய்துவிட்டு மவுண்ட்ரோடில் ஷாப்பிங் முடித்து விட்டு திரும்பும்போது போலீஸ் என்னைப்பிடித்து ஆயிரம் விளக்கு ஸ்டேஷனில் உட்கார வைத்துவிட்டார்கள். தயவு செய்து வந்து பேசி என்னைக்கூட்டிக்கொண்டு போங்கள். இந்த விலங்கு என் மணிக்கட்டில் அழுத்தி அழுத்தி வலி உயிர் போகிறது!

இப்படிக்கு
திரிபுரசுந்தரி

One Comment on “கடிதக்கதைகள் – 7 காரும் மனைவியும்/ஜெயராமன் ரகுநாதன்”

  1. தன் மனைவி shopping முடித்துத் திரும்ப ஒரு மாதத்திற்கு மேலானது என்று மறைமுகமாக
    நையாண்டி செய்கிறார்!
    இவருடைய எழுத்துசுவாரஸ்யமாகவும்
    இருக்கும், நகைச்சுவையாகவும் இருக்கும். இவருடைய
    “இன்னாருக்குப் இன்னாரென்று.. ” என்ற கதையை விருட்சத்தில்
    படித்து ரசித்திருக்கிறேன்.

    மேன்மேலும் எழுதுங்கள்!
    வாழ்த்துக்கள்!
    ஜான்னவி.

Comments are closed.