கம்பன் கவியமுதம்—32/ மகளிரும் வாளை மீனும்/

வளவ. துரையன்

                             கம்பன் கவியமுதம்—32

வேளை வென்ற விழிச்சியர் வெம்முலை
ஆளை நின்று முனித்திடும் அங்கோர்பால்
பாளை தந்த மதுப்பரு கிப்பரு
வாளை நின்று மதர்க்கும் மருங்கு எலாம் [56]

[வேளை=மன்மதனை; முனித்திடும்=கோபிக்கும்; மதர்க்கும்=மதம் கொள்ளும்]

மருத நிலத்தின் மற்றொரு பக்கத்தின் காட்சி இப்பாடலில் காட்டப்படுகிறது.

அங்கிருக்கும் மகளிரைக் குறிக்கும்போது மன்மதனையும் தம் கண்களால் வெற்றிகொண்டவர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றனர். மன்மதன் அம்புகளாலும் வசப்படுத்த முடியாத ஆடவரை அப்பெண்களின் கண்கள் வசப்படுத்தி விடுமாதலால் அவர்களை ”வேளை வென்ற விழிச்ச்சியர்” அதாவது மன்மதனையும் வெற்றி கொண்டவர்கள் எனக் குறிப்பிடுகிறார். அவர்களது முலைகள் காண்போர்க்கு விருப்பத்தை உண்டாக்கும். அவை தாம் இருக்கும் இடத்திலேயே இருந்து அங்கு வேலை செய்யும் ஆள்களைக் கோபித்து வசப்படுத்தும்.

நின்று என்பதற்கு இருக்கும் இடத்திலேயே என்று பொருள் கொள்ள வேண்டும். பிறருக்குக் கோபம் உண்டாக்க அவர்களிடம் செல்ல வேண்டாம் என்பது உணர்த்தப்படுகிறது. மேலும் அம்மருத நிலத்தின் எல்லாப் பக்கங்களிலும் தென்னம் பாளை அரியப்பட்டதால் வடிகின்ற கள்ளைக் குடித்தப் பருத்த வாளை மீன்கள் நிமிர்ந்து எழுந்து செருக்கித் திரியும். பெண்களின் முலைகள் நிமிர்ந்து நின்று கோபிக்கும். அதேபோல வாளை மீன்களும் நிமிர்ந்து நிற்கும் என்பது நயம்.

காமவிருப்பத்தைத் தருதலில் மன்மதனை வென்ற முகத்தினர் என்பதைக் “காமனேர் வயங்கு முகத்தியர்” என்று வில்லிபுத்தூரார் பாடுவார். வாளை மீன்கள் பாளையிலிருந்து வடியும் கள் குடிப்பதைப் பரிபாடல் “ பழன வாளை பாளை உண்டென” என்று காட்டும்