கம்பன் கவியமுதம்/வளவ.துரையன்

                        

                                               
                        வள்ளிக் கிழங்கும் மாம்பழமும்

      வள்ளி கொள்பவர் கொள்வன மாமணித்                        
                           துள்ளி கொள்வன தூங்கிய மாங்கனி
                           புள்ளி கொள்வன பொன்விரி புன்னையில்
                           பள்ளி கொள்வன பங்கயத்து அன்னமே        [65]

[துள்ளி=தேன்துளி; பங்கயம்=தாமரை]
நல்ல ஓசை நயம் கொண்ட பாடல் இதுவாகும்.

வள்ளிக் கிழங்கைத் தோண்டி எடுக்கையில் அவர்களிடம் இரத்தினங்கள் கிடைக்கின்றன. அவற்றை அவர்கள் எறிய அவை தொங்குகின்ற மாம்பழங்களின் மீது விழுகின்றன. அதனால் அவை தேன் துளிகளைச் சிந்துகின்றன. புள்ளிகளின் வடிவம் கொண்ட மகரந்தத் தாதுக்கள் கொண்ட புன்னை மரங்களில் தாமரை மலரில் தங்கும் அன்னம் போய்ப் படுத்துக் கொள்கிறது.
இப்பாடலின் நான்கு அடிகளையும் தனித்தனியே கொண்டும் பொருள் கொள்ளலாம். துள்ளி என்பதற்கு ஆமை என்று பொருள் கொண்டு மாம்பழங்களை ஆமைகள் கவர்ந்து கொள்கின்றன என்பார்கள்.
இப்பாடலில் வள்ளிக் கிழங்கு குறிஞ்சி நிலப்பொருளாகும். மாமரம் மருத நிலத்துக்கு உரியதாம்; தாமரை நெய்தலுக்கும் அன்னம் மருத நிலத்துக்கும் உரியதாம் இப்படி நான்கு வகை நிலங்களும் இங்கு மயங்கி வந்துள்ளன.