நானும் ராமகிருஷ்ணனும் யார்?

G S மணிமுத்து

* நீண்ட நாட்களாக எனக்குள்

என்னை குடைந்து கொண்டிருந்த

நான் யார் எனும் கேள்விக்கு

பால்ய நண்பண் ராமகிருஷ்ணனின்

மரணநாளன்றே விடை கிடைத்தது!


*ராமகிருஷ்ணன் சித்தப்பா

இவன் தவமாய் தவமிருந்து

பெற்ற பிள்ளை குழந்தையில்

கொள்ளை அழகன் என்றார்!


*சித்தியோ தத்தி நடக்கையில்

இவன் கோகுலத்து கிருஷ்ணன்

அதனால்தான் இவனுக்கு

கிருஷ்ணன்  பெயர் என்று

கதறி அழுதார்!


* விடலைப் பருவத்தில்

இவன் பெரிய புத்திசாலி

என்பதை நானும்

 நினைவு கூர்ந்தேன்!


*அப்போது அங்கு வந்த

சக தோழன் ஒருவர்

இவன் வாலிபத்தில்

காண்போர் மயங்கும்

பேரழகன் என்று புலம்பினார்!


* ராமகிருஷ்ணன் 

புனிதர் ,மனிதாபிமானன்,

நல்லவர், அன்பானவர் எனும்

பல சொற்கள் மலர்மாலைகளினூடே

விழுந்து கொண்டிருந்தது!


*அப்போது இடுகாட்டில்

குழிதோண்டி புதைக்கக்

காத்திருந்தவன் விருட்டென

வந்து சற்றும் சலனமின்றி

சொன்னான் 

மிகவும் நாழியாகிவிட்டது

இந்த சவத்தை எப்போது

எடுப்பீர்கள் என்று !


* நான் யார் என்பதையும்

அன்று உணர்ந்தேன்!