
நாத்திகனான அவன் அந்தக்கோவில் வாசலில் நின்று இருந்தது தன்னை முதல் முதலாகச் சந்திக்கப்போகும் வருங்கால மனைவிக்காக.
பெரியவர்கள் ஏற்பாடு செய்தாலும் தனியே அவளைச் சந்தித்து தன் நாத்திக நிலைப்பாட்டைச் சொல்லத்தான். நீண்ட நேரமாகியும் வராததால் நிலை கொள்ளாது தவித்த அவன் மெதுவாக நிலை குலையத் தொடங்கினான்.
கவலையுடன் செல்லுக்கு தொலைப்பேசி செய்தபோது யாரோ எடுத்து அவள் ஸ்கூட்டர்
ஒன்று மோதி அடிபட்டுக் கிடப்பதாகச் சொன்னார்கள்.அவனையறியாமல் கோவிலுக்குள் நோக்கினான் .மனம் தானாக வேண்டுகோள் விடுக்க அவள் விழுந்த இடம் நோக்கி விரைந்தான்
உட்கார்ந்திருந்த அவளைக்கண்டதும் நிம்மதியற்று அருகிலிருந்த மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்ய வைக்கையில் அவள் மேல் அன்பு பெருகியது.
மனம் தானாகவே கடவுளுக்கு நன்றி சொல்லியது.சொல்ல வந்ததைச் சொல்லாமலேயே அவளை அவளது வீட்டில் விட்டபோது அவளது தந்தை, “முதல் சந்திப்பே சகுனம் சரியில்லை மன்னித்து விடுங்கள்” என்றதும் மனமுடைந்து, ‘கடவுளே என்னை நாத்திகனாகவே இருக்கவிடு’ என வேண்டினான்!


மிக அருமையான திருப்பம்