
1
வீழ்த்த நினைக்கிறோம் என்பது
வீழ்த்த நினைக்கிறவனுக்கு தெரிய வேண்டும்
அதற்குப் பெயரே
யுத்த தர்மம்
2
ஒவ்வொருவரைப் பற்றியும்
அப்படி
என்னதான் விஷேசமாகச் சொல்லிவிட முடியும் என்று
நினைக்கிறீர்கள் ?
3
என்னுடைய மனதை சவுக்கால் அடித்து
கலங்கச் செய்வது
வேறு எவரும்
கிடையாது
4
அத்தனை கதவுகளையும்
திறந்த பின்னர்
தெரிகிறது
இந்த உலகம்
வெறும் வெட்ட வெளி
என்பது
5
ஒரு துளி விஷத்தைத் தின்ற பிறகு
ஒரு துளி தேன் கிடைக்கிறது
6
துயரம்
ஆனந்தத்தின்
இருள் பிரதேசம்
7
எவ்வளவு பெரிய மரம் என்பது
தெரிய வேண்டியதில்லை
அங்கோர் குருவி
கூடு கட்டிக் கொள்வதற்கு
8
எத்தனை லிட்டர் ரத்தம் குடித்தாலும்
எல்லாம் மலமாகவே வெளியேறும்
பிறகு எதற்காக
இப்படி
கொந்தளிக்கிறாய் ?
9
ஒரு அரக்கனை வதம் புரிகையில்
அத்தனை அரக்கர்களும் மரிக்கிறார்கள்
ஒரு அரக்கி வீழும் போது
அத்தனை அரக்கிகளும்
அழுகிறார்கள்
10
நான் என்னை வைத்துக் கொண்டு
என்ன செய்யப் போகிறேன்
என்பதே
எனது
பிரச்சனை
11
இல்லாத இடத்திலெல்லாம்
இறைவன்
நிரம்பியிருக்கிறான்
12
பெருமாள் அதிகமாக இருக்கையில் பிரச்சனை இல்லை
குறையக் குறைய
பேராபத்து
- மீள்
