கம்பன் கவியமுதம்—45/வளவ. துரையன்

மாலைகள் தேன் சொரிதல்

     கோதைகள் சொரிவன குளிர்இள நறவம்
     பாதைகள் சொரிவன பருமணி கனகம்
     ஊதைகள் சொரிவன உயிர் உறும் அமுதம்
     காதைகள் சொரிவன செவிநுகர்கனிகள்                [83]                               

[கோதை=பூமாலை அல்லது கூந்தல்; நறவம்=தேன்; பாதைகள்=மரக்கலங்கள்; மணி=இரத்தினம்; கனகம்=பொன்; ஊதைகள்=காற்றுகள்; காதைகள்=காப்பியங்கள்]

கோசல நாட்டில் மங்கையரின் கூந்தல்கள் தேனைச் சொரிவனவாம். அதாவது அவர்கள் அப்போதுதான் கொய்த மலர்களால் தொடுக்கப்பட்ட பூக்களை அணிந்து கொண்டிருந்தார்களாம். மரக்கலங்கள் வணிகம் மூலம் பருத்த இரத்தினங்களையும், பொன்னையும் சொரிந்தனவாம். பாதைகள் என்பதற்குச் செல்லும் வழி என்று கொண்டு அவ்வழிகளில் எடுப்பார் யாரும் இல்லாமையால் இரத்தினங்களும் பொன்னும் கிடந்தன எனப் பொருள் கொள்வாரும் உண்டு. காற்றுகள் உயிரை உடலில் பொருந்துமாறு செய்கின்ற அமுதத்தைச் சொரிந்தனவாம். குளிர் காற்றானது ஆவியை உயிர்ப்பிக்க வல்லதென்பர். கவிஞரின் இனிய காப்பியங்கள் செவிகளால் நுகரப்படும் இனிய பாடல்களைச் சொரிந்தன.