
செங்கையே பங்கயம்
தாலி ஐம்படை தழுவு மார்பிடை
மாலை வாய்அமுது ஒழுகு மக்களைப்
பாலின் ஊட்டுவார் செங்கை பங்கயம்
வால்நி லாஉறக் குவிய மானுமே [90]
[பங்கயம்=தாமரை; வால்=வெண்மை]
தாலி என்பது அக்காலத்தில் பலவகைகளில் வழங்கப்பட்டு வந்துள்ளது. திருப்பாவையில் ”காசும் பிறப்பும் கைகலப்ப” என்பார் ஆண்டாள் நாச்சியார். காசு என்பது அச்சுத்தாலியையும், பிறப்பு என்பது ஆமைத்தாலியையும் குறிக்கும். அவை அக்கால வழக்கப்படி இடையர் குலப்பெண்கள் அணிந்தனவாம். அதுபோல இப்பாடலில் ஐம்படைத்தாலி என்பது குறிக்கப்படுகிறது.
தாலி என்பது இக்காலத்தில் கணவன் அணிவிக்கும் மங்கல அணிப் பொருளாக மாறி விட்டது. ஆனால் இந்த ஐம்படைத்தாலி என்பது குழந்தைகளுக்குப் பிறந்த ஐந்தாம் மாதத்தில் அணிவிப்பதாகும். இருபால் குழந்தைகளுக்கும் அணிவிக்கப்படும். இதைத் தாலி ஐம்படை, ஐம்படை என்றும் வழங்குவர். இதை அணிந்த குழந்தைகளுக்கு அவ்விதக் குறையும் வராது என்ற நம்பிக்கை அன்று நிலவி வந்தது.
குழந்தை ஒன்று அந்த ஐம்படைத் தாலியை அணிந்து கொண்டுள்ளது. அத்தாலி அணிந்த அதன் மார்பிலே அக்குழந்தையின் வாயிலிருந்து சொள்ளு நீர் வடிகிறது. அக்குழந்தைக்கு மகளிர் பால் சோறு ஊட்டுகிறார்கள். சோற்றைத் தம் கைகளில் எடுத்துக்கொண்டு வாயின் அருகில் குவித்துக் கொண்டு போகும் அவர்களின் உள்ளங்கை வெண்மையான நிலா வந்ததால் குவிகின்ற தாமரை மலரைப் போன்றிருந்ததாம்.
குழந்தையின் முகம் வெண்ணிலா என்றும் அதைக் கண்டு குவிகின்ற மலராகிய கை என்றும் பொருள் கொள்வதும் உண்டு.
