மாலன் தனது இணையதளத்தில்

நான் கேட்டேன்: “ இலக்கிய உலகில் உங்களுக்கு முன்னோடிகளும் இல்லை. வாரிசுகளும் இல்லை. எப்படி உணர்கிறீர்கள்?” அரைநொடிக்குப் பிறகு அமைதியைப் பிளந்து கொண்டு வந்தது லாசராவின் குரல்: How Tragic!

தன்னைப் போல் இன்னொரு எழுத்தாளன் இலக்கிய உலகில் இல்லை என்ற எண்ணம் எந்த ஒரு எழுத்தாளனுக்கும் கர்வத்தையோ, அல்லது பெருமித்த்தையோதான் கொடுத்திருக்கும். ஆனால் அது லாசராவிற்குத் தனிமையையோ, மெலிதான துயரத்தையோதான் தந்திருக்கக் கூடும். காரணம் வம்சம், சந்ததி, என்ற சங்கலிகளில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டிருந்தவர் லாசரா.

லாசராவினுடைய எழுத்தின் அடிநாதமே குடும்பம்தான், குடும்பம் என்ற பாற்கடலை, பரவசத்தோடு, இடைவிடாமல் கடைந்து கொண்டிருந்தவர் அவர்.

“என் மேல் இன்றும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. நான் குடும்பத்தைப் பற்றி மட்டுமே எழுதுகிறேன்.ஒரே கதையைத் திரும்பத் திரும்பச் சொல்கிறேன் என்று. ஏன் எழுதக் கூடாது? சொல்லின் உச்சரிப்பை, அதன் சத்யத்தை, செளந்தர்யத்தை ஏன் குடும்பத்தில் தேடக்கூடாது? குடும்பம் என்பது உலகத்தின் ஆரம்பம், வளர்ச்சி எல்லாவற்றையும் பிரதிபலிக்கும் ஒரு அற்புதமான கண்ணாடி. மானுடத்தின் பரம்பரை, பண்பு, மாண்பு எல்லாவற்றின் தொட்டில். தாயின் மடி. எவ்வளவோ மகத்துவம் நிறைந்த உபதேச பீடம். கோட்பாடுகள், Values, இவைகளின் பிறப்பிடம். ஞானக் கோவில்” என்று அடுக்கிக் கொண்டே போகும் லாசரா தன் எழுத்தின் ஊற்றுக்கண், தேடலின் மூலம், குடும்பம்தான் என்பதை இறுதிவரை உறுதியாக நம்பியவர். குடும்பத்தைப் பற்றிப் பேசுவது தெய்வீகத்தை ஆராய்வதற்கு நிகரானது என்று கருதியே தன் எழுத்தின் மூலம் அதனைச் செய்து வந்தார்.

“ தெய்வத்தை நாம் கண்ணால் பார்க்கவில்லை. ஆனால் குடும்பம் என்கிற ஊர் உறவுகள் மூலம் தெய்வீகத்தின் தன்மைகளை நாம் ஆராய முடியும். குடும்பம் என்கிற உழற்சியில் ஏதோ Mysticism இருக்கிறது. என் தேடல் இந்த மூலத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது” என்கிறார் லாசரா.

தனது குடும்பத்தைப் பெருந்திருக் குடும்பம் என்பார் லாசரா. பெருந்திரு அவரது பூர்வீக ஊரான லால்குடியில் கோயில் கொண்டுள்ள கடவுள். அவர்கள் குடும்பத்துக் குலதெய்வம். ப்ரவிருத்த ஸ்ரீமதி என்ற சமஸ்கிருதப் பெயரின் தமிழ் பெருந்திரு. அவளோடு உடனுறைத் தெய்வம் சப்தரிஷீசன்.

லாசரா தன் குடும்பத்தைப் பெருந்திருக்குடும்பம் என்றழைத்துக் கொள்வதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு. லாசராவின் அன்னையின் பெயரும் ஸ்ரீமதிதான். தந்தையின் பெயர் சப்தரிஷீசன்.

லாசராவின் ஆளுமையில் செல்வாக்குச் செலுத்தியவர்களில் அவரது தாய், மற்றும் தந்தையைப் பெற்ற பாட்டி இருவருக்கும் முக்கியப் பங்குண்டு. இருவரையும் வியந்து, பாற்கடல் என்ற தனது குடும்ப வரலாற்றில் நிறையவே எழுதியிருக்கிறார்..

முகநூலில் : ஆர். .கந்தசாமி

One Comment on “மாலன் தனது இணையதளத்தில்”

Comments are closed.