கனவு /எஸ் வி வேணுகோபாலன்

மலை உச்சியில்
கால்கள் சறுக்கிய நொடிப்பொழுதில்
அதல பாதாளத்தில்
விழுந்த அதிர்ச்சியில்
வீட்டுப் படுக்கையில்
கண் விழிக்கிறேன் திடுக்கிட்டு

பிறிதொரு நாள்
எப்போதோ தேர்ச்சி பெற்ற
பதினோராம் வகுப்பு
தேர்வு அறையில்
எந்தக் கேள்விக்கும் பதிலறியாது
முழித்துப் பார்க்குமுன்
விழிக்க நேர்ந்தது

ஓடிப் போய் முயன்றும்
தவற விட்ட ரயில்
மூடப் பட்டு விட்ட கடை
மறுக்கப்பட்ட அடையாள அட்டை
எதிர்மறைக் கனவுகளே
ஏழெட்டு நாட்களாய்..

மருத்துவர் அறையில் அமர்ந்திருக்கிறேன்
பரிசோதனை அறிக்கைகள் அவர் கைகளில்
புருவங்கள் சுருங்கி விரியவும்
அச்சத்தோடு கேட்கிறேன்
அறுவை சிகிச்சை அவசியமோ…

சிரித்துக் கொண்டே
திருப்பிக் கொடுக்கிறார் காகிதங்களை
எதற்கு சிகிச்சை
எல்லாம் ஒழுங்காகத் தானே இருக்கிறதென்று…

கனவு இல்லையா இது
நல்ல வேளை
என்று எழுகிறேன் நான்.

7 Comments on “கனவு /எஸ் வி வேணுகோபாலன்”

  1. நன்றி சொல்ல வேண்டீயது கடவுளுக்கா? மருத்துவருக்கா?
    குழம்பி,, சோற்றை குழப்ப. என்ன குழப்பம்? குழம்பு ளிடவா மனைவி கேட்க, முழித்த வேளையில் முழிப்பு எழுப்பீயது.

  2. “அச்சத்தோடு கேட்கிறேன்
    அறுவை சிகிச்சை அவசியமோ…

    சிரித்துக் கொண்டே”
    இந்த வரிகள் சிரிப்பை வரவழைத்தது. பயம் இல்லாமல் வாழ்வது எப்படி ? என்று புத்தகம் எழுதுங்கள். தங்களது உடல் நலம் சம்மந்தமான மூன்று புத்தகங்கள் போல. அருமை யதார்த்தம், வாழ்த்துகள்!

  3. இந்த வகை கனவுகள் வந்தது எனக்கும்.
    கண்ணை கசக்குவது போல்
    கனவையும் கசக்கி விட்டு போய் கொண்டிருப்போம். ஆனால் நீர் நல்
    தமிழ் கவிதை கொடுத்தது அருமை.

  4. எதிர்மறை நேர்மறை இரண்டும் கலந்ததுதான் வாழ்கை
    நீங்க வாய்ப்பு மறுக்கப்பட்ட மனிதர்களுக்காக போராடும் சிந்தனையுள்ளவராக இருப்பதால் எதிர்மறை கனவுகள் பொருந்திபோகிறது.

Comments are closed.