
டி யூ சுப்பிரமணியம் என்பவர் 1924ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் பிறந்தவர். கல்கி பத்திரிகையின் தொடக்கம் முதல் அப்பத்திரிகையின் பிரதான ஓவியர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
கல்கியின் “பொன்னியின் செல்வன்”, “சிவகாமியின் சபதம்” ஆகிய புதினங்களுக்கு மணியம் எனும் பெயரில் ஓவியம் வரைந்தார். அந்தப் புதினங்களின் பாத்திரங்கள் ஒவ்வொருவரையும் அருமையாக, வேறுபடுத்தி வரைந்த பெருமைக்குரியவர்.
இதிலென்ன பெருமை என்கிறீர்களா?
பொன்னியின் செல்வன் நவீனம் கல்கி பத்திரிகையில் 1950ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி இதழில் ஆரம்பித்து, 1954வரை வெளி வந்தது. அது நடைபெறும் இடங்களாக கல்கி எழுதிய இடங்களுக்கு எல்லாம் கல்கியுடன் மணியமும் சென்று..அந்தந்த இடங்களுக்கான சிற்பங்களை வரைந்தார். அப்புதினத்தில் மொத்தம் 42 முக்கியக் கதாபாத்திரங்கள். ஒவ்வொரு பாத்திரத்தையும்..பார்த்ததும்..இது இவர்தான் என நாம் உணரும் வண்ணம் வேறுபடுத்தி வரைவது என்பது சாமான்யமா? அதைத்தவிர உதிரி பாத்திரங்கள் வேறு.
பொன்னியின் செல்வன் மீண்டும் கல்கியில் வந்தபோது..மணியம் மீண்டும் ஒரு முறையும், வினு ஒரு முறையும், பத்மவாசன் ஒருமுறையும் வேதா ஒருமுறையும் ஓவியம் வரையும் பொறுப்பினை ஏற்றனர். ஆனால்..அவர்கள் மணியம் வரைந்த மூல ஓவியத்தை வைத்தே வரைந்தனர்.
அதை விடுத்து கல்கி பத்திரிகையில் வெளி வந்த பல சமூக/சரித்திர நாவல்களூக்கு மணியம் ஓவியராய் இருந்துள்ளார்.
’பொன்னியின் செல்வன்’ நூலின் முன்னுரையில் இராஜாஜி, ஓவியர் மணியத்தின் ஓவியங்கள் நல்லவர்களையும் திருடத் தூண்டும் அளவு சிறப்பாக உள்ளதால், நூல்களை பத்திரமாக பாதுகாக்கும்படி நூலகர்களையும், புத்தகத்தை படித்துவிட்டு திருப்பித் தர வாடகைக்குக் கொடுப்பவர்களுக்கும் நகைச்சுவையாக அறிவுறுத்தும் பெருமை பெற்றவை இவரது ஓவியங்கள் என்றுள்ளதே இவர் ஓவியத்துக்கு கிடைத்துள்ள பெரிய சான்றிதழ் அல்லவா?
கல்கி தீபாவளி மலர்கள் இவரது ஓவியத்தை முகப்பு அட்டையாகக் கொண்டு வந்தன.
ராஜாஜி, கல்கியில் எழுதி வந்த “சக்ரவர்த்தித் திருமகன்” என்ற வால்மீகி ராமாயணத்திற்கு மணியம் வரைந்த ஓவியங்கள் போற்றப்பட வேண்டியன ஆகும்.
கல்கியை விடுத்து, பகீரதன் நடத்தி வந்த “கங்கை” எனும் பத்திரிகையிலும் ஓவியங்கள் வரைந்துள்ளார்.
இவரது மகன் மணியம் செல்வனும் ஓவியர் ஆவார்.

கல்கி பத்திரிகையின் வெற்றிக்குக் காரணமே அதன் (அப்போதைய) வித்தியாசமான சைஸும், அதன் மேலட்டை ஓவியங்களும் தான். தொடர்கதைகளில் வரும் காட்சிகளை மேலட்டையாக வெளியிடுவார்கள். வர்த்தகக் காரணங்களுக்காக சினிமா நடிகைகளின் படங்களை வெளியிட ஆரம்பித்ததும், பத்திரிகையின் அளவை ராணி சைசுக்கு மாற்றியதும் கல்கியின் இமேஜை பெரிதும் பாதித்து விட்டன என்பது என் கருத்து. கல்கியின் ஓவியர்கள் ஒவ்வொருவரும் கையெடுத்துக் கும்பிட வேண்டியவர்கள்! அது போன்ற காலம் இனி வருமா?