அப்துல்கலாம் பற்றிய எளிய குறிப்புகள்…./அழகியசிங்கர் 

(28.07.2015 அன்று நான் முக நூலில் பகிர்ந்து கொண்டது ) 



எதிர்பாராதவிதமாய் நேற்று இரவு 7 மணி சுமாருக்கு டிவியை ஆன் செய்தேன். பிரதம மந்திரி கலாமை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். ஏன் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார் என்று யோசித்தப் போதுதான் தெரிந்தது. அப்துல்கலாம் மாணவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது மரணம் அடைந்து விட்டார் என்ற துக்கச் செய்தியை அறிய நேர்ந்தது. சமீபத்தில் ஒரு கூட்டத்தில் அப்துல்கலாம் பேசுவதைக் கேட்டேன். அவர் ரொம்பவும் வயதாகிப் போய், பேசும்போதே தடுமாறுவதுபோல் தோன்றியது.

நான் 2004ல் பந்தநல்லூர் என்ற ஊரில் உள்ள வங்கிக் கிளையில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு துயரமான சம்பவம் நடந்தது. கும்பகோணத்தில் உள்ள ஒரு பள்ளிக் கூடம் எரிந்து, தப்பிக்க முடியாமல் பல சிறார்கள் எரிந்த சாம்பலாகி விட்டார்கள். பெரிய துயரமான சம்பவம். என் அலுவலகத்தில் உள்ள ஒரு பெண்மணி, இந்தச் செய்தியைக் கேட்டவுடன், அழ ஆரம்பித்துவிட்டார்.

இது மாதிரியான துயரத்தை எப்படி கவிதையாக வரிகளில் கொண்டு வருவது என்று யோஜனை செய்து கொண்டிருந்தேன். வெறும் வார்த்தைகளால் வடித்து விடலாம். ஆனால் அதை கவிதை வரிகளில் வடிப்பது என்பது சாத்தியமில்லை என்றே தோன்றியது. ஏதோ எழுதலாம். ஆனால் அதைக் கவிதையாக ஏற்க முடியாது.

அந்தத் தருணத்தில்தான் குடியரசு தலைவராக இருந்த அப்துல்கலாம் தினமணியில் கும்பகோணத்தில் தீயில் கருகிய குழந்தைகளைக் குறித்து ஒரு கவிதை எழுதியிருந்தார். அதைப் படித்துவிட்டு அசந்து விட்டேன். சாதாரணமாக பொது துக்கத்தை கவிதையாகக் கொண்டு வருவது அவ்வளவு சுலபமல்ல. அக் கவிதையை எடுத்து என் இதழில் மறுபடியும் பிரசுரம் செய்தேன்.

அக் கவிதை இதுதான்:

அன்றுஏன் கதிரவன் கடும் கரும் மேகங்களை ஊடுருவவில்லை
அன்று ஏன் குடந்தைத் தென்றல் கனலாக மாறியது
அன்று ஏன் தாயுள்ளங்கள் பதறித் துடித்தன
இளஞ்சிறார்கள் அக்னித் தேவனின் சினத்தில் தத்தளித்தனர்
அன்று ஏன் அச்சிறார்களை இறைவன் அக்னிக் குஞ்சுகளாகப்
பரிணமித்தான்?

இறைவா இதுவோ கொடுமையிலும் கொடுமை
வளர்ந்து கல்விகற்று பணிசெய்யும் பருவத்தில்
பழுத்த வயதில் மறைந்த தாய்தந்தையரை பூமிக்குக் கொடுப்பர்
இன்றோ காண்பது கொடுமையிலும் கொடுமை
பாலர்களை ஒவ்வொன்றாய் தந்தையர் பூமியில் புதைக்கும் காட்சி

தாய்கண்ட கனவு, தந்தைகண்ட கனவு, சிறார்கள் கண்ட கனவு
எல்லாமே அக்னியின் வேகத்தில் கரிக்குஞ்சாய் பரிணமித்தன
இறைவா குழந்தைகள் உன் படைப்பு – அவர்கள்
உன்னிடமே அடைக்கலத்தில் அடைந்தார்கள்
உன் அருளால் அக் குழந்தைகள் எங்கிருப்பினும் நன்றிருக்க

கையேந்தி பிரார்த்திக்கிறோம் கையேந்தி பிரார்த்திக்கிறோம்

இறைவா உன் அருளால் – தம் குழந்தைகளை இழந்து
தவிக்கின்ற பெற்றோருக்கு மன அமைதி பாக்கியத்தை
மறுபடியும் வாழவிலருள் – அவர்கள் எப்பொழுதும்
உனை நம்பி அமைதி வாழ்வு வாழ பிரார்த்திக்கிறேன்.
(22.07.2004)

அந்த இதழ் நவீன விருட்சத்தை அவருக்கு அனுப்பினேன்.

அவரிடமிருந்து 26.10.2004 ந்தேதி ஒரு பதில் கடிதம் வந்தது. அதை இன்னும் பாதுகாத்து வருகிறேன். அதில் இவ்வாறு எழுதி இருந்தார்.

திரு அழகியசிங்கர் அவர்களுக்கு,

வணக்கம்.

தங்களது கடிதமும், üüநவீன விருட்சம்ýý கவிதை இதழும் (செப்டம்பர் 2004) கிடைத்தது. நன்றி. üபரிவுý கவிதை நன்றாக உள்ளது.
உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
(ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்)

அவர் ரசித்த கவிதையை காளி-தாஸ் எழுதியது.
அக் கவிதை வருமாறு:

பரிவு

எங்கள் வீட்டு
செடிகளுக்கு கொட்ட நீர்
கிடையாது
கடும் தண்ணீர் தட்டுப்பாடு
குளிக்கும் நீர் ஓடி
செடிகளுக்கு பாய வழி செய்தோம்
நாங்கள் இப்போது
சோப் உபயோகிப்பதில்வைல குளிக்கையில்

சமீபத்தில் மக்கள் மனதில் நிரந்தரமாகக் கூடிக் கொண்ட துக்கமாக கலாமின் மரணமாக இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. 

See less

View 6 previous comments

Most relevant



One Comment on “அப்துல்கலாம் பற்றிய எளிய குறிப்புகள்…./அழகியசிங்கர் ”

  1. கண்கள் குளமாகக்
    கலாம் கவிதை படித்தேன்.
    பெரியோர் என்றும் பெரியோரே
    விருட்சம் இதழ் சிரஞ்சீவியானது
    கலாம் என்னும் அரிய இதயம்
    வாழ்த்தி இருக்கிறது இதழை
    கும்பகோணம் நகரத்து அத்தனை தெய்வங்களும்
    கல்லாகிய கருப்பு தினம் அன்று.
    தெய்வமும் உண்டுகொல் ?கேள்வி துளைத்தெடுத்தது.
    உறங்காத இரவு
    எனக்கும் எல்லோர்க்கும்.

Comments are closed.