சொந்த ஜென் கதைகள்/பேயோன்

நிரப்புதல்

துறவி ரியோகான் ஒரு மலை உச்சியிலிருந்து சிறு கற்களை ஒவ்வொன்றாக எறிந்துகொண்டிருந்தார். அவரை சாப்பிட அழைக்க வந்த இளம் சீடன், “என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் குருவே?” என்று கேட்டான். “இந்தப் பெரும்பள்ளத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறேன்” என்றார் ரியோகான். “உங்களுக்கென்ன பைத்தியமா? இது சாத்தியமா?” என்றான் சீடன். அதற்கு ரியோகான், “அதை நீ பள்ளத்திடம் அல்லவா கேட்க வேண்டும்?” என்றார்.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் நாமே செய்வதாக நம்புவது முட்டாள்தனம்.