ஏனோ இன்று/ஆர் வத்ஸலா

உன் அளவற்ற காதலில்
நான் உருகிக் கரைந்தேன்
நீ அன்புடன் உரிமை கொண்டாடியதை
ரசித்தேன்
உனது அன்புக் கட்டளைகள்
என் நலனுக்காகவே என்பதனால்
ஓர் அடிமை போல் அடி பணிந்தேன்
மகிழ்வுடன்

இன்றும் உன் காதல் அளவற்றது தான்

ஆனால்
உனக்கு முழுமனதாய்
நான் எழுதித் தந்த உரிமை சாசனம்
கனக்கிறது
என் கழுத்தில் தொங்கி
ஏனோ இன்று

உன் அன்பு கட்டளைகள்
இப்பொழுதும் என் நலனுக்காகவேதான்
ஆனால்
இறுக்குகின்றன சங்கிலி போல்
என் கைகால்களை
ஏனோ இன்று
உன் உரிமை கூண்டில் மூச்சடைக்கிறது
எனக்கு
ஏனோ இன்று

2 Comments on “ஏனோ இன்று/ஆர் வத்ஸலா”

Comments are closed.