தாகம்/செல்வம் ரெத்தினம்

என்வீட்டு முற்றத்தில்
விளக்கி வைத்த
ஜாடி ஒன்றில்
கூழாங்கற்களை போட்டும்
மேலே நீர் வராமல்
தாகத்துடன் காகம் ஒன்று
தத்தி என்னிடம் வந்தது.

ஜாடியில் நீர் நிறைத்து
அப்படியே…
கனவில் அம்மா
எனக்குக் கொடுத்த
ஆரஞ்சு வண்ண
பஞ்சுமிட்டாய் ஒன்றை
அதனிடம் நீட்டினேன்.

தாகம் அடங்கா காகம்
அதைக் கொண்டுபோய்
கடலில் போட்டதும்
உப்புகள் சர்க்கரையாகி
கடல் இனித்ததாம் !

தாகம் தீர்ந்த காகம்
அதன் இனத்தையே
கடலுக்கு அழைத்தது.

இன்றைக்கும் …
என் வீட்டு ஜன்னலில்
காகங்கள் அமர்ந்து
என் அம்மாவின் ஓவியத்தை
கண்டும் கரைந்தும்
வணங்கிச் செல்கின்றன.

ok

Show quoted text

One Comment on “தாகம்/செல்வம் ரெத்தினம்”

Comments are closed.