பின்லாந்து கல்விமுறை/பாண்டியன் சுந்தரம்

பின்லாந்து கல்விமுறையில் அப்படி என்னதான் இருக்கிறது? மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ்நாள் லட்சியம்!

ஐ.நா சபை ஒவ்வோர் ஆண்டும் கல்வி குறித்து தரப் பட்டியலை வெளியிடுகிறது. அந்தப் பட்டியலில் கடந்த சில ஆண்டுகளாக நான்கு நாடுகளின் பெயர் கட்டாயம் வந்துவிடுகின்றன. அவற்றில் பின்லாந்து மற்றும் டென்மார்க் கட்டாயம் இடம்பெற்றுவிடுகிறது. இந்தளவு தொடர்ச்சியாகச் சாதிக்கும் அளவுக்கு அப்படி என்னதான் பின்லாந்தில் கற்றுக்கொடுக்கிறார்கள்?

  • பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது. ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைக்கு 16 வயதுவரை (9ஆம் வகுப்புவரை) தேர்வு இல்லை!
  • ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல், இரண்டரை வயதில் ப்ரீ.கே.ஜி., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.ஜி. என்ற சித்ரவதை அங்கே இல்லை.
  • எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளைக்கு ஏட்டுக்கல்வி முதலில் இல்லை. தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்கு உரிய கல்வி.
  • ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை….
  • ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவுதான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் பிற கலைகளுக்கும் உண்டு.
  • ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்.
  • 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது. தகுதி அட்டை தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது.
  • தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம்.
  • கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை.
  • சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை.
  • இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை.
  • மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம்.
  • ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்.
  • ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது. ஒரு வகுப்பிற்கு 15 முதல் 20 மாணவர்கள். இதனால் ஆசிரியர் கவனம் செலுத்த முடிகிறது.
  • பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம்.
  • கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும்… அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும்… ‘என் பொண்ணு இன்டர்நேஷனல் ஸ்கூல்ல படிக்கிறா’ என சீன் போட முடியாது.
  • அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி என்ற உத்தரவாதம் உள்ளது.
  • முன்பருவ, அடிப்படைக் கல்வி வகுப்புகளில் பாடப் புத்தகங்கள், உணவு, மாணவர்களுக்கான போக்குவரத்து வசதி ஆகியவை இலவசம்.சிரத்தை எடுத்து உண்மையிலேயே குழந்தைகளுக்கு சத்தான உணவு தரமாகத் தயாரிக்கப்பட்டு பள்ளிகளில் வழங்கப்படுகிறது.
  • ஹையர் செகண்டரி நிலையில் படிக்கும் மாணவர்கள் தாங்களே புத்தகங்களை மட்டும் வாங்க வேண்டியிருக்கும். அதேசமயம், உணவு இலவசம்தான். உயர்கல்வி மாணவர்களைப் பொருத்தவரை சலுகை விலையில் உணவு வழங்கப்படும்.
  • அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர்.
  • அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர்… ‘டியூஷன்’ என்ற அருவருப்பான கலாச்சாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை…
  • பள்ளிகளுக்கு விண்ணப்பித்து அட்மிஷன் பெறுவதற்கு பள்ளிகளின் வாயிலில் பெற்றோர்கள் காத்துக் கிடக்க வேண்டியதில்லை. வீட்டுக்கு அருகே உள்ள பள்ளிகளில் எளிதாகச் சேரலாம். பெரிய நகரங்களில் மாணவர்கள் சில வரையறைகளுக்கு உட்பட்டு, தங்களது விருப்பத்திற்கு ஏற்ற இடங்களில் உள்ள பள்ளிகளில் சேரவும் அனுமதிக்கப் படுவதுண்டு. கிராமத்துப் பள்ளி, நகரத்துப் பள்ளி என்றெல்லாம் வேறுபடுத்த முடியாமல் அனைத்தும் தரமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  • பள்ளியை அதிகாலையிலேயே தொடங்கும் வழக்கம் கிடையாது. பள்ளி காலை 9 மணியிலிருந்து 9.45க்குத் தொடங்கி பிற்பகல் 2 மணியிலிருந்து 2.45க்குள் முடிந்துவிடும். வாரத்தில் அய்ந்து நாட்கள்தான் பள்ளிகள் நடைபெறும். ஆண்டுக்கு அதிகபட்சம் 190 நாட்கள் பள்ளி நடக்கும். அந்தந்தப் பள்ளிகள் விரும்பினால், தேவைக்கு ஏற்ப மேலும் விடுமுறை அளிக்கலாம்.
  • பள்ளி மாணவர்களிடையே நன்கு படிக்கும் மாணவர், சுமாராகப் படிக்கும் மாணவர், அதற்கும் கீழ்த் தரத்தில் படிக்கும் மாணவர்கள் என்றெல்லாம் பள்ளி மாணவர்களைத் தரம் பிரிப்பது கிடையாது. அனைவரும் ஒரே வகுப்பில்தான் படிப்பார்கள். கற்பதில் சிரமப்படும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்துவார்கள்.
  • முதல்ஆறு ஆண்டுகளுக்கு ஒரே ஆசிரியரே வகுப்புகளை எடுப்பார். இதனால், மாணவர்களை ஆசிரியர்கள் நன்கு புரிந்துகொண்டு அவர்களுக்குப் புரியும் வகையில் பாடங்களை நடத்தமுடியும். அதைத் தொடர்ந்து, மூன்று ஆண்டுகளுக்குச் சிறப்பு ஆசிரியர்கள் வகுப்பு எடுப்பார்கள்.
  • வழக்கமான கல்வி முறையைப் பின்பற்றி வந்த பின்லாந்து, 1970ஆம் ஆண்டில் அந்த நாட்டின் கல்வித் துறையில் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தது. அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்தி அந்த நாட்டை நூறு சதவீத மக்களும் எழுத்தறிவு பெற்ற நாடாக ஆக்கியுள்ளது. 71 ஆண்டுகளுக்கு முன்னரே மதிய உணவுத் திட்டத்தைப் பள்ளிகளில் செயல்படுத்திய நாடு இது.

தேர்வுகளே அடிப்படை முறைகளாக இல்லாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர். காரணம் என்ன? கல்வியாளர்களுக்கே புரியாத புதிர்… அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா.சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது.

  • உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது.
  • மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் பெறுகின்றனர்.
  • பின்லாந்து கல்வி முறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர்.
  • பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, நம் ஊர் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போல மிகுந்த சமூகக் கவுரவம் உடையது.
  • அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.
  • மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ்நாள் லட்சியம்.

ஆசிரியர்க்குரிய தகுதி:

  • மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
  • அய்ந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும்.
  • பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி.
  • ஒரு வருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறைகளில் ஆசிரியர் பயிற்சி.
  • ஏதாவது ஒரு பாடத்தில் புராஜெக்ட். குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது. நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ்… தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று… என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும்.
  • இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம் இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது! பிள்ளைகளின் உளவியல் சார்ந்த இயற்கையோடு இயைந்த இன்பமான கல்விமுறை, ஏழைகளை ஏற்றிவிடும் எளிய கல்விமுறை, அதேநேரத்தில் உலகிலே உயர்வான, தரம் வாய்ந்த கல்விமுறை பின்லாந்து கல்விமுறை!

One Comment on “பின்லாந்து கல்விமுறை/பாண்டியன் சுந்தரம்”

Comments are closed.