நவராத்திரி: முதல் இரவு/புதிய மாதவி 

வெள்ளை உடையில் இருக்கிறேன்.

யாரும் என்னைத் தொட்டுவிடாதீர்கள்.

எந்தக் கறையுமின்றி இந்த இரவைக்

காமட்டிபுரம்

கடந்துவிட வேண்டும்.

மொட்டு விரியும் தருணமிது.

உயிரின் ரகசியம் பொதிந்த இரவு

பால்வீதியை வெளியில் நிறுத்தியிருக்கிறேன்.

நட்சத்திரங்களின் கண்களை

கரிய மேகத்துண்டுகளால்

கட்டிவிடுங்கள்.

இந்த ஓரிரவிலேனும்

வெள்ளைத்தாமரையில்

என்னுடல் பூத்திருக்கட்டும்.

ஹே சென்னிமல்லிகார்ஜூனா..

ஒவ்வொரு இதழாக

இரவின் விரல்கள் தீண்டி

உதிர்வதற்குள்

விடிந்துவிடாதா

காமனை எரித்த

முதல் இரவு.

#நவராத்திரி_முதல்இரவு