புகை மறைவுப் பிரதேசம்/எல்.ரகோத்தமன்

  
ஊற்றுக்கண்
எங்கோ இருக்க
ஜன்னல் வழியே
நுழைந்துவிட்ட புகையால்
திணறுகிறது மூச்சு!
 
யாரைக் கேட்டு
நுழைந்தது  புகை!
 
புகை எல்லோருக்கும் பகை!
 
ஜன்னலை மூடினால்
புகை நீர்த்துப் போகும்!
ஆனால்
காட்சிகளற்ற
வெற்று மனதில்
எண்ணங்களும்
நீர்த்துப் போகும்!
முரண்கள் கிளைவிடும்!
 
மொட்டவிழத் துடித்தப் பூக்கள்
மலராமலே வாடிவிடக் கூடும்!
 
காற்றில் மிதக்கும் வாசம்
வேறெங்கோ வாசம் கொள்ளும்!
 
மெழுகு உருகி முடிவதற்குள்
கரைந்துபோன தருணங்களின்
இணையோடு
இலைகளும் உதிர்ந்து
நான் வளர்த்த
மரம் மொட்டையாகும்!
 
உள்ளே
கனன்றிருக்கும் பொறிகள்
ஜ்வாலையாக  மாறும்
வாய்ப்பிழக்கும்!
 
 ஏது செய்தால்
என்  திணறல் நீங்குமென
யோசிக்கையில்
என் இருப்பிடம்
என்க்கே இல்லாமல் போனபோது
வேறு வழியின்றி
புகையோடு புகையாக
என்னுள்ளே நானே
பெருமூட்டமாய்
வியாபித்துப் போனேன்!

05-10-2022