எழுதுபவனின் பரிதாப நிலை/அழகியசிங்கர்

(07.10.2022 அன்று 90 வது விருட்சம் கவிதை நேசிக்கும்
நிகழ்வில் வாசித்த கவிதை )

குடும்பத்தில்
யாராவது
ஒருவராவது
படிப்பார்களா என்று
எதிர்பார்த்தேன்
பெரிய
ஏமாற்றம்
அவர்கள் முன் நான் எழுதிய
தாள்கள் பிரிக்கப்படாமலிருந்தன

நண்பர்கள்
கண்ணைக் கசக்கி
வாசிப்பார்கள் என்று நம்பினேன்
ஓட ஓட விரட்டுகிறார்கள்

வாசகர்கள் வரவேற்பார்களென்று
நம்பினேன்
அவர்கள் யாரும் கண்ணில்
தட்டுப்படவில்லை

நானே எடுத்து வைத்துக்கொண்டு
நானே படிக்கிறேன்
பரவசம்
அடைகிறேன்