500 படங்கள், மல்டி டாஸ்க், ரகுவரனின் அன்பு/ ரோஹிணி

500 படங்கள், மல்டி டாஸ்க், ரகுவரனின் அன்பு… – ரோஹிணி ஓப்பன் ஷேரிங்ஸ்
விகடன் டீம்
மகன் ரிஷியின் ஒன்பது வயசுலேருந்து நான் சிங்கிள் பேரன்ட். அவனைச் சரியான பாதையில் வளர்த்திருக்கேன்.

“இந்தி உட்பட ஐந்து மொழிகளில், 500 படங்களுக்கு மேல நடிச்சிருப்பேன். அதில், 100 படங்களுக்கும் மேல் ஹீரோயின்! ஹீரோயினா நடிச்சப்போ தெலுங்கில் நல்ல வாய்ப்புகள் வரலைன்னு வருத்தப்பட்டேன். ஆனா, ‘பாகுபலி’ உட்பட பல நல்ல தெலுங்குப் பட வாய்ப்புகள் இப்போதான் அதிகம் வருது. அதனால, உடல்நலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, இளமைத் தோற்றத்துல என்னைப் பராமரிச்சுக்கிறேன். நல்ல கதைகளைத் தேர்வு செஞ்சு, நிதானமா நடிக்கிறேன். இயக்குநராக ஆக்டிவா வேலை செய்யணும்னு, அதற்கான முயற்சிகளையும் செய்துட்டிருக்கேன்.

நிறைய பயணம் செய்து, புதுப்புது மனிதர் களைச் சந்திக்கிறேன். வீட்டுல நூலகம் இருக்கு. வாசிப்புக்கு அதிக நேரம் செலவிடுவேன். பல மொழிப் படங்களையும், தியேட்டருக்குப் போய்ப் பார்ப்பேன். இளைய தலைமுறைக்கு ஊக்கம் கொடுக்கிற சிறுகதைகளை யூடியூப் மற்றும் ரேடியோ வாயிலாகக் கொண்டுபோகிற எண்ணம் இருக்கு. இயற்கை விவசாயத்துல எனக்கு அதிக ஈடுபாடு உண்டு. எதிர்காலத்துல முழுநேர இயற்கை விவசாயி ஆகணும், குழந்தைகளுக்கான ஸ்கூல் நடத்தணும்னு நிறைய ஆசைஇருக்கு. கடந்த நாலு வருஷமா தனிமையில் வசிச்சாலும், கொஞ்சம்கூட வருத்தமில்லாம எதிர்கால இலக்குகளை நோக்கி உற்சாகமா இயங்கிட்டிருக்கேன்!

500 படங்கள், மல்டி டாஸ்க், ரகுவரனின் அன்பு… – ரோஹிணி ஓப்பன் ஷேரிங்ஸ்
ரகுவரனும் நானும் காதல் திருமணம் செய்துகிட்டோம். ஒருகட்டத்தில் எங்க மகனுக்காக, நியாயமான காரணத்துக்காகவே நான் ரகுவிடமிருந்து பிரிஞ்சேன். பிறகு, பொருளாதாரத் தேவைக்காக மீண்டும் நடிக்க முடிவெடுத்தேன். நான் தொகுப்பாளரா வேலை செய்த ‘கேள்விகள் ஆயிரம்’ நிகழ்ச்சி பிரபலமாச்சு. அதைப் பார்த்துத்தான், ‘விருமாண்டி’ படத்துல எனக்கு ரீ-என்ட்ரி வாய்ப்பு கொடுத்தார் கமல் சார். பிறகு, ‘ஐயா’, ‘தாமிரபரணி’ படங்கள் உட்பட இப்போவரை தொடர்ந்து கேரக்டர் ரோல்கள்ல நடிக்கிறேன்.

ரகுவும் நானும் பிரிந்திருந்தாலும், நல்ல நண்பர்களாகவும் ரிஷிக்கு நல்ல பெற்றோராகவும் இருந்தோம். ஒரு படத்தின் ஷூட்டிங் முடிஞ்சு நான், ஆச்சி மனோரமா, மகன் ரிஷி ஆகியோர் ரயில்ல வந்திட்டிருந்தோம். எங்களின் டிக்கெட் தொலைந்து போனது, டி.டி.ஆர் வந்தப்போதான் தெரிஞ்சது. எவ்வளவோ சொல்லியும் கேட்காத டி.டி.ஆர், ‘அடுத்த ஸ்டேஷன்ல இறங்கிடுங்க’ன்னு கோபமா சொல்லிட்டார். அப்போ யதேச்சையா போன் செய்த ரகுவரன்கிட்ட விஷயத்தைச் சொன்னேன். அவர் டி.டி.ஆர்கிட்ட பேசணும்னு சொல்ல, நான் போனைக் கொடுத்தேன். ரகு என்ன பேசினார்னு தெரியலை. ‘நீங்க இதே ட்ரெயின்ல டிராவல் செய்யலாம்’னு சொல்லிட்டு, டி.டி.ஆர் அமைதியா போயிட்டார். பிரிந்திருந்தாலும், எங்களுக்குள் அன்பு குறையாததுக்கு இந்த நிகழ்ச்சி ஓர் உதாரணம்!

மகன் ரிஷியின் ஒன்பது வயசுலேருந்து நான் சிங்கிள் பேரன்ட். அவனைச் சரியான பாதையில் வளர்த்திருக்கேன். அப்பாவின் பிரிவிலிருந்து அவனை மீட்டெடுக்க ரொம்பவே மெனக்கெட்டேன். இப்போ 21 வயதிலிருக்கும் ரிஷி, ரொம்ப ஸ்மார்ட். பக்குவத்துடன் அவனுடைய எதிர்காலத்தை தீர்மானிச்சுக்கிறான். அமெரிக்காவில் வரும் மே மாதத்தில் நான்காம் வருட மெடிசின் படிப்பை முடிக்கிறான். பிறகு, ஸ்காலர்ஷிப்ல மேற்படிப்பை அவனே பார்த்துப்பான். இவ்வளவு வருஷமா பொருளாதாரத் தேவைக்காக நான் ஓடிய ஓட்டமெல்லாம் ரிஷியின் படிப்புக்காகத்தான். இனி அந்த ஓட்டத்துக்கு அவசியமில்லை.

‘மறுபடியும்’ படத்தில் நடிக்கும்போது, பாலு மகேந்திரா சார் சொல்லி, பிலிம் அப்ரிஸியேஷன் கோர்ஸ்ல கலந்துகிட்டேன். அப்போ, நிறைய உலக சினிமா படங்களைப் பார்த்து வியந்து இயக்குநராக முடிவெடுத்தேன். அதுக்கு என்னைத் தயார்படுத்திக்கிட்டு, ‘அப்பாவின் மீசை’ படத்தை இயக்கினேன். இதுக் கிடையே,’வேருக்கு நீர்’ நாவலை நடிகை ரேவதி தூர்தர்ஷன்ல டெலி பிலிமாக எடுக்க, அதற்கு நான் திரைக்கதை எழுதினேன்.

500 படங்கள், மல்டி டாஸ்க், ரகுவரனின் அன்பு… – ரோஹிணி ஓப்பன் ஷேரிங்ஸ்
ஒருநாள், ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்துக்கு ஜோதிகாவுக்கு நான் டப்பிங் பேசிட்டிருந்தேன். அப்போ போன் செய்த ரேவதி, ‘வேருக்கு நீர்’ டெலி பிலிமுக்கு சில வரி தமிழ்ப் பாடலை உடனே எழுதித்தரச் சொன்னாங்க. எழுதிக்கொடுத்தேன்! என் பக்கத்துல இருந்த இயக்குநர் கெளதம் மேனன் ஆச்சர்யப்பட்டு, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்துக்கு ஒரு பாடல் எழுதச் சொன்னார். அப்படித்தான், ‘உனக்குள் நானே’ பாடலை எழுதினேன். தொடர்ந்து சில படங்கள்ல பாடல்கள் எழுதினேன். பாடலாசிரியர்கள் நல்ல வாய்ப்புக்காகக் காத்திருக்கும் நிலையில், நாம இதை ஒரு பிரதான வேலையா செய்யக் கூடாதுன்னு முடிவெடுத்தேன். தவிர, நவீன மேடை நாடகங்கள்ல நடிக்கிறேன். திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்குப் பாடம் எடுக்கிறேன். முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநிலத் துணைத் தலைவராகவும் பணியாற்றுகிறேன். இப்படி மல்டி டாஸ்க் பணிகள், என் உற்சாகத்தை அதிகரிக்குது!”

  • தெலுங்கு சினிமாவால் கண்டெடுக்கப்பட்டு, மலையாள சினிமாவால் வளர்க்கப்பட்டு, தமிழ் சினிமாவால் மெருகேற்றப்பட்ட யதார்த்த நடிகை, ரோஹிணி. குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கியவர், 45 ஆண்டுகளாகியும் இன்றும் இளமைத் துடிப்புடன் நடித்துக்கொண்டிருக்கிறார்.

நன்றி: விகடன்

முகநூலில் : ஆர்.கந்தசாமி