லயிப்பு/ப.மதியழகன்

தவிட்டுத் தூறல்
குதிரையின் குளம்படி நிரம்பியது
காற்று தட்டாமாலை சுற்ற வைத்தது
மரங்கள் சாமியாடி போல்
வெறி கொண்டு ஆடின
யானையின் எயிறு
வானைப் பிளந்துவிடும்
மழையின் மறுவரவு
வானத்தின் எக்களிப்பு
வெளியே நின்றுவிட்டது
உள்ளே இன்னும்
தூறிக் கொண்டு
மலரின் இதழ்களில்
துளித்துளியாய் வந்து
விழுகிறது
மழை பெய்கிறது
அலை கடலில்
செம்மண் பாதையில்
உலர்த்திய துணிகளில்
வீட்டின் கூரையில்
சில சமயம் சிப்பியினுள்
மழையின் மறுவரவு
மழையை நனைக்கிறது
உச்சந்தலையில் சகஸ்ராரத்தில்
ஒரு சொட்டு
இடிவந்து இறங்கியது போல
ஆயிரம் இதழ்கொண்ட
தாமரை விரிகிறது
மழை கடவுள்
கடவுள் மழை!