கழுதையும் கவிதையும் /எஸ் வி வேணுகோபாலன்

கவிதையைப் பற்றிப் பேசும்
கணமெலாம் கழுதை பாவம்
கவிதையாம் கவிதை என்ன
கழுதையோ என்பார் வீட்டில்
தவிப்புறும் இளைஞன் தண்டக்
கழுதை தான் யார் கேட்டாலும்
செவிப்புலம் கிழியக் கேட்கும்
திட்டெலாம் கழுதை பேரில்

கழுதையின் வயதார் அறிவார்
இரட்டிப்பு வயதெனக்கு!
பொழுதெலாம் பொதிசு மந்தும்
பொறுப்பற்ற பெயரு மாச்சு
எழுதிடும் முன்பே கவிதை
இரைவரக் காத்தி ருக்கும்
கழுதையே அன்பே கண்ணே
கனியட்டும் நம் சொந்தங்கள்!

5 Comments on “கழுதையும் கவிதையும் /எஸ் வி வேணுகோபாலன்”

  1. கவி (ழு )தை மிக அழகாக வந்துள்ளது. படித்த உடன் சிரிப்பும் வந்தது. 👏🏼👏🏼

    கற்பூர வாசனை எனக்
    கெதற்க்கு?
    என் முகத்தை பார்
    யோகம் வரும்
    என்று புகைப்படத்தில்
    போஸ் தரும் கழுத
    விடு கிடக்கட்டும்.

  2. கத்தினாலும்
    கட்டெறும்பாய் தேய்த்தாலும்
    குட்டிச்சுவரானாலும்
    எட்டி உதைத்தாலும்
    புகழ் பெற்ற இப்பெயரினை
    சொல்லாமல் வழக்கில்லை
    மனிதர் வாழ்வில்..‌

  3. நாலு கழுத வயசாகியும்
    பொறுப்பு வரல..திட்டினார்
    எட்டு கழுத வயசாகியும்
    வேலைக்கு போகாத அப்பா..

  4. கழுதை கவிதை அழகு அதை தின்னாமல் பார்த்துக் கொள்ளுவதே நம் பொறுப்பு விழுதைகளை பாதுகாத்தால் ஆலமரங்கள் விழுவதில்லை.

Comments are closed.