
அப்பா என்னைக்
கூப்பிடும்போது
கழுதை கழுதை என்றுதான்
கூப்பிடுவார்
அம்மாவிடம் முணுமுணுத்தேன்
என்னம்மா இது
அப்பா கழுதை கழுதை
என்கிறாரே என்று
அப்பாவிடம் என்ன சொன்னாளோ அம்மா
அப்புறம்
அப்படிக் கூப்பிடுவதை
நிறுத்தி விட்டார்
நானும் பெரியவளாகி
நாலு காசு சம்பாதித்து
கல்யாணமும் செய்து கொண்டேன்
இப்போதோ
எல்லோருடைய பொதியைச் சுமக்கும்
கழுதையாகி விட்டேன்

